Published : 02 Mar 2015 10:48 AM
Last Updated : 02 Mar 2015 10:48 AM

நாட்டில் பணவீக்கம் ஏற்படும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கருத்து

பெட்ரோல், டீசல் விலையேற்றத் தால் விலைவாசி உயர்ந்து பணவீக்கம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 55 டாலரிலிருந்து 61 டாலராக உயர்ந்துவிட்டது என்ற காரணத்தைக் கூறி பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3.18 ஆகவும், டீசல் விலையை ரூ.3.09 ஆகவும் மத்திய அரசு உயர்த்தியுள்ளது. ஏற்கெனவே மத்திய நிதிநிலை அறிக்கையால் இந்திய மக்கள் ஏமாற்றமடைந்துள்ள சூழலில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாக பெட்ரோல், டீசல் விலையை பாஜக அரசு உயர்த்தியுள்ளது.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 120 டாலராக இருந்தது. ஆனால் தற்போதோ 61 டாலராகத்தான் உள்ளது. அப்போது இருந்த விலை 60சதவீதம் குறைந்துள்ளதால், பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.40 என்றும் டீசல் ஒரு லிட்டர் ரூ.30 எனவும் தான் விற்கப்பட்டிருக்க வேண்டும். இதற்கு மாறாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.63.31 ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.52.90 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்த போது, கலால் வரி, விற்பனை வரி போன்றவற்றை விதித்து மத்திய அரசு தனது வருமானத்தை பெருக்கிக் கொண்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால், விலைவாசியும் உயர்ந்து பணவீக்கம் அதிகரிக்கும் மோசமான சூழல் உருவாகியுள்ளது. எனவே, இந்த விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x