Last Updated : 08 Dec, 2015 04:30 PM

 

Published : 08 Dec 2015 04:30 PM
Last Updated : 08 Dec 2015 04:30 PM

வெள்ள நிவாரண பணிகளில் அரசியல் செய்யாதீர்: கடலூரில் ராகுல் காந்தி வலியுறுத்தல்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகள் மேற்கொள்வதில் அரசியல் செய்ய வேண்டாம் என்று கடலூரில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மற்றும் கடலூர் மக்களை இன்று சந்தித்து நிவாரண உதவிகளை அளித்த அவர் மேலும் கூறும்போது, "இதுபோன்ற இக்கட்டான சூழலில் மக்களின் தேவையை அறிந்து அதனை அவர்களுக்கு அளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட புதுச்சேரி மற்றும் தமிழக மாவட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நாம் கை கொடுக்க வேண்டும்.

வெள்ள நிவாரணப் பணிகளில் அரசியல் செய்வதைவிட, பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை பூர்த்திசெய்வதே நமது முதல் கடமை" என்றார் ராகுல் காந்தி.

முன்னதாக, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட இன்று காலை தமிழகம் வந்தடைந்தார்.

சென்னை வந்த ராகுல் காந்தி ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி சென்றார். ஷண்முகா நகர், ஈச்சங்காடு, கிரிமாம்பாக்கம் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்ற அவர் அங்கிருந்த மக்களை சந்தித்து அரிசி, உடை உள்ளிட்ட அடிப்படை தேவைகள் அடங்கிய நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.

இதனை அடுத்து, மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் கடலூருக்குச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை பார்வையிட்டார்.

ஹெலிகாப்டர் மூலம் சென்னை வரும் அவர், மேற்கு தாம்பரம், முடிச்சூர், வில்லிவாக்கம், ராயபுரம், தண்டையார்பேட்டை, கோட்டூர்புரம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிடுகிறார்.

பின்னர், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் வீடுகளை இழந்து தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x