Published : 31 May 2018 03:51 PM
Last Updated : 31 May 2018 03:51 PM

போராட்டத்தினால் நாடு சுடுகாடு ஆகும் என்றால் சுதந்திரம் எப்படி கிடைத்தது? ரஜினிக்கு காங்கிரஸ் பிரமுகர் கேள்வி

போராட்டம் நடத்தினால் நாடு சுடுகாடாகி விடுமென்றால் போராடாமலா சுதந்திரம் கிடைத்தது. நாட்டுக்கு சுதந்திரம் எப்படி கிடைத்தது என்று ரஜினிக்கு காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று மதியம் தூத்துக்குடியில் பேட்டி அளித்த போது தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவினர் என்று கூறி துப்பாக்கிச் சூடு குறித்து நியாயப்படுத்தும் வகையில் பேசினார்.

இதை அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் கண்டித்தனர். இந்நிலையில் நேற்று மாலை சென்னையில் பேட்டி அளித்த ரஜினி போராட்டம் போராட்டம் என்று நடத்தினால் நாடு சுடுகாடாகிவிடும் என்று தெரிவித்தார்.

ரஜினியின் கூற்றை காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் போன்றோர் நியாயப்படுத்தி வரும் நிலையில், காங்கிரஸ் பிரமுகரும் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான ஜோதிமணி தனது முகநூல் பக்கத்தில் ரஜினியை கண்டித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது முகநூல் பதிவு:

“போராட்டத்தால் ஒரு ஸ்டெர்லைட் மூடப்பட்டு நாடு சுடுகாடாகிவிடும் என்றால் கரூர், திருப்பூர் போன்ற லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் தொழில் நகரங்கள் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, அரசின் அலட்சியத்தால் சுடுகாடாகி வருகிறதே இது பற்றியெல்லாம் எப்போதாவது பேசியிருக்கிறீர்களா ரஜினி?

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது பிஜேபியும், இப்போது ரஜினியும் ஒன்றுபோல ' சமூக விரோதிகள்' பற்றிப் பேசுகிறார்கள். தெரியுமென்றால் அவர்களை அடையாளம் காட்டவேண்டியது தானே? போராட்டத்தை எதற்கு கொச்சைப்படுத்த வேண்டும்?படுகொலை செய்யப்பட்ட 13 பேரும் 17 வயது மாணவி உட்பட சமூக விரோதிகளா?

போராட்டத்தால் ஒரு சமூகம் சுடுகாடாகுமென்றால் பிறகு எதற்காக திரைப்படங்களில் போர்க்கோலம் போடுகிறீர்கள்? புரட்சி பற்றிப் பேசுகிறீர்கள்? இந்திய சுதந்திரப் போராட்டம் 300 ஆண்டுகள் நடந்திருக்கிறது. அதனால் தான் சுடுகாடாகிவிடாமல் இந்த மண் இன்னும் உயிர்த்திருக்கிறது.

அப்பொழுதும் உங்களைப் போன்ற அதிகாரத்தின் ஏவலாள்கள் உங்கள் குருநாதர்கள் இதேபோல் தான் பேசிவந்தார்கள். ஏன் சுதந்திரப்போராளிகளை காட்டிக் கூட கொடுத்தார்கள். ஆங்கிலேயரின் ஆளுகைக்குட்பட்ட அடிமை தேசத்தில் போராளிகள் உயிர்த்தெழுந்த வரலாறு நம்முடையது.

சுதந்திர மண்ணில் மக்களை அடிமைகளாக இருக்கச் சொல்லாதீர்கள். அதுதான் ஒரு தேசத்தை சுடுகாடாக்கிவிடும். போராட்டங்கள் அல்ல.”

இவ்வாறு அவர் ரஜினியை கண்டித்து பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x