Published : 26 Apr 2024 05:23 AM
Last Updated : 26 Apr 2024 05:23 AM
நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் வாயு கசிவு காரணமாக மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் என 5 பேர் பாதிக்கப்பட்டனர்.
நாகர்கோவில் மாநகராட்சி பகுதிக்கு முக்கடல் அணையில் இருந்து குழாய்கள் வழியாக கிருஷ்ணன்கோவிலில் உள்ள மாநகராட்சி சுத்திகரிப்பு நிலையத்துக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது. அங்கு தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, நாகர்கோவில் நகரம் முழுவதும் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், கிருஷ்ணன்கோவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த குளோரின் வாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டது. இதனால் சுத்திகரிப்பு நிலையத்தில் பணியில் இருந்த பம்ப் ஆபரேட்டர்கள் ஆபிராகாம், அருண் ஆகியோர் பாதிக்கப்பட்டு, மயக்கமடைந்தனர். தொடர்ந்து, இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவலறிந்த நாகர்கோவில் தீயணைப்புத் நிலைய வீரர்கள் சுத்திகரிப்பு நிலையத்துக்கு சென்று, குளோரின் வாயு கசிவை சரி செய்ய முயன்றனர்.
அப்போது தீயணைப்பு வீரர்கள் வரதராஜன், கருப்பசாமி, சுயம்பு சுப்பராமன் ஆகியோரும் மயக்கமடைந்தனர். அவர்களும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், மற்ற தீயணைப்பு வீரர்கள், குளோரின் வாயு கசிவை சரிசெய்தனர்.
இந்த சம்பவத்தால் கிருஷ்ணன்கோவில் பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்துக்கு உள்ளாகினர். குளோரின் சிலிண்டரை கவனக்குறைவாக கையாண்டதே வாயுகசிவுக்கு காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT