Published : 06 May 2024 07:37 AM
Last Updated : 06 May 2024 07:37 AM

மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா சஸ்பெண்ட்: ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் நடவடிக்கை

பஜ்ரங் பூனியா

புதுடெல்லி: சிறுநீர் மாதிரிகளை வழங்க மறுத்துள்ள காரணத்தால் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவை காலவரையின்றி சஸ்பெண்ட் செய்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் (நாடா) நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் இவர் பாரீஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது சந்தேகம் எனத் தெரியவந்துள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் மல்யுத்த விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் பஜ்ரங் பூனியா.

கடந்த ஆண்டு, இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷணுக்கு எதிராக மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் மற்றும் வினேஷ் ஆகியோருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர் பஜ்ரங் பூனியா.

இந்நிலையில், கடந்த மார்ச் 10-ம் தேதி ஹரியாணா மாநிலம் சோனேபட்டில் நடைபெற்ற ஊக்கமருந்து சோதனையின் போது பஜ்ரங் பூனியா, அவரது சிறுநீர் மாதிரிகளை (சாம்பிள்) வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

சிறுநீர் மாதிரிகளை வழங்காததால் அவர் காலவறையின்றி சஸ்பெண்ட் செய்யப்படுகிறார் என்று நாடா அமைப்பு நேற்று அறிவித்தது. இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை காரணமாக வரும் ஜூலை மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தொடங்க உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பஜ்ரங் பூனியா கலந்து கொள்வது சந்தேகம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் (நாடா) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மறு உத்தரவு வரும் வரை அனைத்து வகையிலான மல்யுத்த போட்டிகள் மற்றும் நிகழ்வுகளில் பஜ்ரங் பூனியா கலந்து கொள்ள தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊக்கமருந்து சோதனைகளுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்க மறுத்தது, பரிசோதனைக்காக சிறுநீர் மாதிரிகளை வழங்க மறுத்தது குறித்து வரும் 7-ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக அறிக்கை அளிக்க வேண்டும் என்று பஜ்ரங் பூனியாவுக்கு தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் (நாடா) உத்தரவிட்டு இருந்தது.

பஜ்ரங் பூனியா மறுப்பு: இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பஜ்ரங் பூனியா தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கூறியதாவது: என்னை ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்துமாறு கூறப்பட்ட செய்தியை தெளிவுபடுத்த விரும்புகிறேன். சிறுநீர் மாதிரிகளை தருவதற்கோ, சோதனைக்கோ ஒருபோதும் நான் மறுத்ததில்லை.

ஊக்க மருந்து சோதனைக்காக எனது சிறுநீர் மாதிரியை எடுக்க அவர்கள் (நாடா அதிகாரிகள்) கொண்டு வந்த காலாவதியான `கிட்' மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பதற்கு முதலில் பதிலளிக்குமாறு அவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

அதன் பின்னர் எனது ஊக்கமருந்து சோதனை மாதிரிகளை எடுக்க வேண்டும். இந்தக் கடிதத்துக்கு எனது வழக்கறிஞர் விதுஷ் சிங்கானியா உரிய நேரத்தில் பதிலளிப்பார். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x