Published : 20 Mar 2024 06:01 AM
Last Updated : 20 Mar 2024 06:01 AM

பிரதமரின் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு: விளக்கம் அளிக்குமாறு தனியார் பள்ளிக்கு நோட்டீஸ்

கோவை/சென்னை: கோவையில் பிரதமர் மோடியின் வாகனப் பேரணியின்போது மாணவர்களை பங்கேற்க வைத்த அரசு உதவிபெறும் பள்ளிக்கு, விளக்கம் அளிக்க கோரி கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் கோவையில் நேற்று முன்தினம் நடைபெற்றவாகனப் பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்தப் பேரணியில் சாய்பாபா காலனியைச் சேர்ந்த அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து விசாரணை நடத்துமாறு, மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டார்.

இதையடுத்து, கோவை மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளியின் அறிவுறுத்தலின்படி, மாவட்டக் கல்வி அலுவலர் புனிதா, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேற்று நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, பள்ளிக் குழந்தைகளை வாகனப் பேரணிக்கு அழைத்துச் சென்றது தொடர்பாக 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ்அனுப்பியுள்ளோம். பள்ளி நிர்வாகத்தின் பதில் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிவைக்கப்பட்டு, பின்னர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.

தேர்தல் ஆணையத்தில் புகார்: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் புகார் மனுவை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிசத்யபிரத சாஹுவிடம் திமுக வழக்கறிஞர் சரவணன் வழங்கினார். அவர் கூறும்போது, ‘‘கோவையில்பிரதமர் மோடி கலந்துகொண்ட விழாவில் பள்ளிக் குழந்தைகளும்அழைக்கப்பட்டு, பங்கேற்றுள்ளனர். தேர்தல் ஆணைய விதிமுறைப்படி, குழந்தைகளை எவ்விததேர்தல் பிரச்சாரத்துக்கும் பயன்படுத்தக்கூடாது. ஆனால், குழந்தைகள் முதல் முதியோர் வரை தங்களுக்கு ஆதரவு இருப்பதை காட்டுவதற்காக, பாஜகவினர் குழந்தைகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி இருக்கின்றனர். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய புகாரில், ‘‘கோவையில் பிரதமர் மோடி பங்கேற்ற வாகனப் பேரணியில், பள்ளி மாணவர்கள் பங்கேற்றது குறித்து விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, பிரதமர் மோடி பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியதும்,தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானதாகும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x