Published : 20 Mar 2024 05:02 AM
Last Updated : 20 Mar 2024 05:02 AM

கடல் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் காற்றாலை மின்சாரம்; தமிழகம் முழுவதும் விநியோகம் செய்ய ரூ.11,485 கோடி செலவில் வழித்தடம்

கோப்புப்படம்

சென்னை: தமிழகத்தில் கடலில் அமைக்கப்படும் காற்றாலை மின்சாரத்தை எடுத்து வந்து பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்க ரூ.11,485 கோடி செலவில் வழித்தடத்தை மத்திய அரசு அமைக்கிறது.

தமிழகம், குஜராத் மாநிலங்களில் உள்ள கடல் பகுதிகளில் 30 ஆயிரம் மெகாவாட் திறனில் காற்றாலை மின்நிலையங்கள் அமைக்க சாதகமான சூழல் நிலவுகிறது. இதை மத்திய அரசின் புதுப்பிக்கத்தக்க மின்துறை ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளது.

இதையடுத்து, முதல் கட்டமாக இரு மாநிலங்களிலும் தலா 5 ஆயிரம் மெகாவாட் திறனில் கடலில் காற்றாலை மின்நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் இடையே உள்ள பகுதிகளில் கடலில் காற்றாலை மின்நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, அங்குள்ள கடல் படுகையை குத்தகை விடுவது, ஆய்வு உள்ளிட்ட பணிகள் தொடங்கி உள்ளன. கடலில் அமைக்கப்படும் காற்றாலை மின்சாரத்தை எடுத்து வந்து பல்வேறு பகுதிகளில் விநியோகம் செய்ய கடலிலும், நிலத்திலும் மின்வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.

முதற்கட்டமாக, ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை விநியோகம் செய்ய திருநெல்வேலி மாவட்டம், ஆவரைகுளம் என்ற இடத்தில் 400, 230 கிலோவோல்ட் திறனில் துணைமின் நிலையம் அமைக்கப்படும். கடலில் பல்வேறு இடங்களில் நிறுவப்படும் காற்றாலை மின்நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை ஒருங்கிணைத்து எடுத்து வர கடலுக்கு அடியில் 230 கிலோவோல்ட் ஆம்பியர் திறனில் 7 கேபிள்கள் அமைக்கப்படும்.

திறன் வாய்ந்த மின்மாற்றிகள்: இவற்றின் மூலமாக மின்சாரம் ஆவரைகுளம் துணைமின் நிலையத்துக்கு எடுத்து வரப்படும். ஆவரைகுளம் துணைமின் நிலையத்தில் 500 மெகா வோல்ட் ஆம்பியர் திறனில் 12 அதிக திறன் வாய்ந்த மின்மாற்றிகள் நிறுவப்படும். அவை 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தைக் கையாளும் திறன் கொண்டவை.

ஆவரைகுளம் துணைமின் நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, கரூருக்கு மின்சாரம் எடுத்து வந்து தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது.

இதற்காக, ஆவரைகுளத்தில் இருந்து தூத்துக்குடியில் உள்ள மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனத்தின் 400 கிலோவோல்ட் துணைமின் நிலையத்துக்கு 100 கிலோ மீட்டர் தூரத்துக்கு மின்கோபுர வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.

மேலும், ஆவரை குளத்தில் இருந்து கரூர் மாவட்டம் புகளூரில் உள்ள 400 கிலோவோல்ட் துணைமின் நிலையத்துக்கு 300 கிலோ மீட்டர் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.

இவற்றுக்கான மொத்த திட்ட செலவு ரூ.11,485 கோடியாகும். இப்பணிகளை விரைவில் தொடங்கி வரும் 2030-ம் ஆண்டுக்குள் முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என மத்திய மின்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x