Published : 20 Mar 2024 04:44 AM
Last Updated : 20 Mar 2024 04:44 AM

தமிழகம், புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது

விருதுநகரில் தேர்தல் முன்னேற்பாடு பணிகளை பார்வையிடம் மாவட்ட ஆட்சியர் வி.பி.ஜெயசீலன்

சென்னை: தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கான வாக்குப்பதிவு, முதல்கட்ட தேர்தல் நாளான ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்தபடி, தமிழகம், புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. மார்ச் 27-ம் தேதி வரை அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். 28-ம் தேதி தேர்தல் பொதுப் பார்வையாளர் முன்னிலையில், மனுக்கள் பரிசீலனை நடைபெறும். போட்டியிட விரும்பாதவர்கள், மனுக்களை வாபஸ் பெற மார்ச் 30-ம் தேதி கடைசி நாள். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, சின்னம் ஒதுக்கப்படும்.

இந்நிலையில், வேட்புமனு தாக்கல் நடைமுறைகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியதாவது:

மனுதாக்கல் செய்ய வேண்டிய இடம் மற்றும் நடைமுறைகள் தொடர்பான அறிவிப்பை, வேட்புமனு தாக்கல் தொடங்குவதற்கு முன்பு தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், யாரிடம் வேட்புமனுக்களை சமர்ப்பிக்க வேண்டும் என்பதை தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவிப்பார்.

வேட்புமனு தாக்கல் நடைபெறும் நாட்கள், பரிசீலனை, வாபஸ் பெறும் நாள், வாக்குப்பதிவு நாள் உள்ளிட்ட தகவல்களையும் அவர் முறைப்படி அறிவிப்பார்.தேர்தல் நடத்தும் அலுவலரால் அறிவிக்கப்படும் அலுவலகங்களில், அறிவிக்கப்படும் நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.

மனுதாக்கல் செய்யும் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் வேட்பாளரின் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். அதேபோல, மனுதாக்கலின்போது, வேட்பாளர் உட்பட5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மனுதாக்கல் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படும். மனுதாக்கலின் கடைசி நாளன்று பிற்பகல் 2 மணி முதல் இறுதி வரை முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படும். 3 மணி வரை காத்திருப்பவர்கள் அலுவலகத்துக்குள் வரவழைக்கப்பட்டு அனைவரும் மனுதாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

பொது வேட்பாளராக இருந்தால் ரூ.25,000, ஆதிதிராவிடர், பழங்குடியினராக இருந்தால் ரூ.12,500 கட்டணமாக செலுத்த வேண்டும். வேட்புமனுவை வேட்பாளர் அல்லது அவரை முன்மொழிபவர்கள் தாக்கல் செய்யலாம். அரசியல் கட்சிகளின் வேட்பாளராக இருந்தால் கட்சி அளிக்கும் சின்னத்துக்கான படிவம் இடம்பெற வேண்டும். ஒருவர் முன்மொழிய வேண்டும். சுயேச்சையாக இருந்தால் அந்ததொகுதியில் வசிக்கும் 10 பேர்முன்மொழிந்திருக்க வேண்டும். அதில் ஒருவர் மனுதாக்கலின்போது உடன் இருக்க வேண்டும்.

ஆன்லைனில் வேட்புமனுவை பூர்த்தி செய்ய மட்டுமே முடியும். பூர்த்தி செய்த மனுவை தேர்தல்நடத்தும் அலுவலரிடம் நேரில்தான் வழங்க வேண்டும். வேட்புமனுவுடன் பிரமாண பத்திரத்தையும் வழங்க வேண்டும். மனுவில்தவறு இருந்தால், தேர்தல் நடத்தும் அலுவலர் அதுதொடர்பாக வேட்பாளரிடம் தெரிவிப்பார். வேட்பாளர், அதை திருத்தி, மனுதாக்கலின் கடைசி நாளுக்குள் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கினாலும், முதல் சில நாட்கள் வரை சுயேச்சை வேட்பாளர்கள் மட்டுமே மனுதாக்கல் செய்வார்கள். அதன்பிறகே அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்வார்கள்.

தற்போதைய சூழலில், திமுகஇன்று வேட்பாளர்களை அறிவிக்கிறது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் விருப்பமனுக்களை பெற்றுள்ளது. மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

அதிமுக சார்பில் விருப்பமனுக்கள் பெறப்பட்டு, நேர்காணல் முடிக்கப்பட்டுவிட்டாலும், கூட்டணியில் உள்ள புரட்சி பாரதம், புதிய தமிழகம், ஃபார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை.

கூட்டணி குறித்து தேமுதிக ஓரிரு நாளில் அறிவிக்க உள்ளது. பாஜக கூட்டணியிலும் தொகுதி ஒதுக்கீடு முழுமையடையவில்லை. அதனால், ஓரிரு நாட்களுக்கு பிறகே, வேட்புமனு தாக்கல் களைகட்டும் என்று தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x