Published : 14 Mar 2024 10:15 PM
Last Updated : 14 Mar 2024 10:15 PM

‘வடசென்னைக்காக அடுத்த 3 ஆண்டுகளில் 200 திட்டங்கள்’ - பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின்

சென்னை: அடுத்த மூன்று ஆண்டுகளில் வடசென்னையில் 200 திட்டங்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை தங்கசாலையில் நடைபெற்ற வடசென்னை வளர்ச்சித் திட்ட பணிகள் விரிவாக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "திமுக உருவானதும் வட சென்னையில்தான்; முதல்வரான என்னை, சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்ததும், இந்த வடசென்னை கொளத்தூர் தொகுதி மக்கள்தான்.

எனவேதான், எம்.எல்.ஏ.,வாக, மேயராக, அமைச்சராக, துணை முதலமைச்சராக, இப்போது, முதலமைச்சராக சிறப்பு கவனம் செலுத்தி, வளர்ச்சி என்பது, ‘எல்லார்க்கும் எல்லாம்’ என இருக்க வேண்டும் என்று திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு இருக்கிறேன்.

சென்னை மாநகரில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமை எனக்கு உண்டு. 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த சென்னை மாநகரத்தை நவீனமாக்கியதில் பெரும் பங்கு திமுகவுக்கு உண்டு. இன்றைய சென்னையில் எல்லா வளர்ச்சிப் பணிகளுமே திமுக உருவாக்கியதுதான்.

அண்ணா சாலை, அண்ணா மேம்பாலம், வள்ளுவர் கோட்டம், செம்மொழிப்பூங்கா, தொல்காப்பியப் பூங்கா, நாமக்கல் கவிஞர் மாளிகை, தலைமைச் செயலகமாக கட்டப்பட்டு இன்று பெரிய பல்நோக்கு அரசு மருத்துவமனையாக இருக்கின்ற ஓமந்தூரார் மருத்துவமனை, டைடல் பார்க், ஓ.எம்.ஆர் ஐ.டி.காரிடர், மெட்ரோ ரயில், கோயம்பேடு பேருந்து நிலையம், கோயம்பேடு காய்கறி அங்காடி, சென்னையில் வெள்ள பாதிப்புகளை தடுக்க பல நூறு கிலோமீட்டருக்கு மழைநீர் வடிகால் பணிகள், குடிநீர்த் தேவைக்கு நெம்மேலி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம், மீஞ்சூர் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், கத்திபாரா மேம்பாலம், கோயம்பேடு மேம்பாலம், பாடி பாலம், மீனம்பாக்கம் பாலம், மூலக்கடை பாலம், மேற்கு அண்ணாநகர் பாலம், வியாசர்பாடி பாலம், இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்…

இப்படி திரும்பிய பக்கம் எல்லாம் சென்னைக்கான வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றி, இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வளர்ச்சியை ஏற்படுத்தியது திமுக அரசு. திமுக ஆட்சியில்தான் சென்னையின் அந்த காலம் பொற்காலமாக இருந்தது. இடைக்காலத்தில், பத்து வருடம் பதவியில் இருந்தவர்கள் சென்னையை சீரழித்து, பாழ்படுத்தினார்கள். நம்மை பொறுத்தவரை, துயர் வரும் நேரம் துணை நிற்பது மட்டுமில்லை; துயர் துடைக்க புதிய திட்டங்களையும் உருவாக்கிக்கொண்டு வருகிறோம்.

சென்னை மீண்டும் புதுப்பொலிவு அடைந்து கொண்டு வருகிறது. இதற்காகவே தீட்டப்பட்டிருக்கின்ற சிறப்புத் திட்டம்தான் ‘வடசென்னை வளர்ச்சித் திட்டம்!’

திராவிட மாடல் அரசின் கடந்த பட்ஜெட்டில், இந்த திட்டத்திற்காக ஆயிரம் கோடி ரூபாய் அறிவித்தோம். ஆனால், வடசென்னையின் மக்கள் தொகை, இடப்பற்றாக்குறை, மக்கள் நெரிசல், போக்குவரத்து நெரிசல், இந்தப் பகுதி மக்களிடம் இருந்து வந்த கோரிக்கைகள், இதையெல்லாம் மனதில் வைத்து, இன்றைக்கு அந்தத் தொகையை நான்கு மடங்கு உயர்த்தி, 4 ஆயிரத்து 181 கோடி ரூபாய் மதிப்பில், 11 அரசுத் துறைகளுடன் இணைந்து, வட சென்னை வளர்ச்சிக்கு இந்த மெகா திட்டம் செயல்பட போகின்றது.

இந்த திட்டத்தின்கீழ், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் திட்டங்களுக்கு 440 கோடியே 62 லட்ச ரூபாயும், இதர துறைகளின் திட்டங்களுக்கு, 886 கோடியே 46 லட்ச ரூபாயும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ஒதுக்கீடு செய்யும். மீதமுள்ள நிதியை அந்தந்த துறைகள், வாரியங்கள் மற்றும் நிதிநிலை அறிக்கை ஒதுக்கீடுகள் மூலம் அடுத்த ரெண்டு ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்படும்.

இந்த திட்டத்தில் என்னென்ன செய்யப் போகிறோம்? - மாதிரிப் பள்ளிகளை உருவாக்குதல், குறைந்த விலையில் வீட்டுவசதி, திறன் மேம்பாட்டு மையங்களை உருவாக்குதல், புதிய பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகள நிர்மாணித்தல், மேம்படுத்துதல், முக்கியமான பகுதிகளில் துணை மின் நிலையங்கள், போதைக்கு அடிமையானவர்களை மீட்கும் மறுவாழ்வு மையம், மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள், மருத்துவச் சுகாதார நிலையங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கான உயர்சிறப்புப் பிரிவு, தரமான குடிநீர் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்படும்.

அதுமட்டுமல்ல, இந்தப் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை ஏற்று, கழிவுநீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மை அமைப்புகள், பொதுப் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், சந்தைகள், சலவை செய்யுமிடம் மற்றும் டயாலிசிஸ் மையங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளும் வடசென்னை முழுக்க முக்கியமான இடங்களில் நிறுவப்படும். இன்னும் இருக்கிறது!

640 கோடி ரூபாய் செலவில், கொடுங்கையூரில் உயிரி சுரங்கத் திட்டம், 238 கோடி ரூபாய் செலவில் இரண்டு பெரிய பாலங்கள், 80 கோடி ரூபாயில் தணிகாசலம் கால்வாய் புனரமைப்புத் திட்டம் 823 கோடி ரூபாய் செலவில் பாரிமுனை பேருந்து முனையம் மறுகட்டுமானம், 15 இடங்களில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 7 ஆயிரத்து 60 சேதமடைந்த குடியிருப்புகள் இடிக்கப்பட்டு 9 ஆயிரத்து 798 புதிய குடியிருப்புகள் ஆயிரத்து 567 கோடியே 68 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப் போகிறோம்.

இப்படி, இன்றைக்கு தொடங்கி வைத்திருக்கின்ற 87 திட்டங்கள் உட்பட அடுத்த மூன்று ஆண்டுகளில் 200 திட்டங்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது. இந்தத் திட்டங்கள் எல்லாம் முடிவுறுகிறபோது, வடசென்னையின் வரலாற்றில், ஒரு புதிய சகாப்தத்தை திமுக எழுதியிருக்கும்" இவ்வாறு பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x