Last Updated : 14 Mar, 2024 08:32 PM

 

Published : 14 Mar 2024 08:32 PM
Last Updated : 14 Mar 2024 08:32 PM

தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையால் பணத்தை இழக்கும் ஓசூர் தொழிலாளர்கள்!

ஓசூர்: ஓசூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையால், தொழிலாளர்கள் பலரும் பணத்தை இழந்து வருகின்றனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிற மாநில லாட்டரி சீட்டு விற்பனை அதிகரித்துள்ளது. இதில், குறிப்பாக ஓசூரில் தொழிலாளர்களை குறிவைத்து ஒரு எண் முதல் 4 இலக்கு எண் கொண்ட லாட்டரி சீட்டுகள் ரூ.25 முதல் ரூ.200 வரையில் விற்பனை செய்யப்பட்டுகிறது. இந்த லாரிட்டரிகள் பேருந்து நிலையம் சுற்றிலும், தொழிற்சாலைகளையொட்டி உள்ள பகுதிகள் மற்றும் தொழிலாளர்கள் தங்கி உள்ள குடியிருப்புகள், விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமோகமாக நடக்கிறது.

இதில் பலர் ஏஜென்ட்டுகளாக உள்ளனர். லாட்டரி சீட்டு குலுக்கல் மதியம் 1 மணிக்கு மேல் தொடங்கி இரவு 8 மணி வரை 4 முறை ஆன்லைனில் ரிசல்ட் வெளியாகிறது. இதனை விற்பனையாளர்கள் குறித்துக்கொண்டு லாட்டரி வாங்கியவர்களுக்கு டோக்கன் வழங்கி பரிசு விழுந்ததாக சிலரை அழைத்து கமிஷன் பெற்றுக்கொண்டு பணம் வழங்குவதை போல் நாடகமாடுகின்றனர்.

இதனை நம்பி பலர் கடன் வாங்கி லாட்டரி சீட்டு வாங்கி பணத்தை இழக்கின்றனர். இதனால் தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். லாட்டரி விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆரவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து ஓசூரை சேர்ந்த முனியப்பன் கூறும்போது, “ஓசூர் பகுதியில் இயங்கும் சிறு,குறு மற்றும் பெரிய தொழிற்சாலைகளில் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்து ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இங்குள்ள தொழிலாளர்களை குறிவைத்து குறைந்த முதலீட்டில் அதிக வருவாய் ஈட்டுவதாக ஆன்லை மோசடி மற்றும் லங்கர் கட்டை என சூதாட்டத்தில் 2 மடங்கு பணம் கொடுப்பதாக ஒரு கும்பல் ஏமாற்றி வருகின்றனர்.

இதேபோல் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, கேரளா போன்ற வெளி மாநில லாட்டரி மற்றும் நெம்பர் லாட்டரிகள் விற்பனை செய்கின்றனர். ஓசூர் பகுதியில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் கடன் வாங்கி லாட்டரி வாங்குகின்றனர். இதன் மூலம் பல தொழிலாளர்கள் பணத்தை இழந்து தங்கியுள்ள வீடுகளுக்கு வாடகை கட்டாமலும், உணவின்றி நடுத்தெருவுக்கு வந்துள்ளனர்.

சிலரை நாங்கள் பணம் உதவி கொடுத்து சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்பி உள்ளோம். இது குறித்து போலீஸாருக்கு தகவல் அளித்தால் பெயரளவுக்கு நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால் மீண்டும் ஒரு சில தினங்களிலியே அரசியல்வாதிகள் மற்றும் உள்ளூர் போலீஸார் ஆதரவுடன் இது போன்ற பணம் பறிக்கும் தொழிலில் ஈடுப்படுகின்றனர்.

இது குறித்து மாவட்ட காவல்துறை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தொழிற்சாலைகள் மற்றும் பொது இடங்களில் ஆன்லைன் மோசடி மற்றும் லாட்டரி வாங்குவது குறித்து விழிப்புணர்வு செய்ய வேண்டும்” என அவர் கூறினார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x