Published : 06 Mar 2024 02:42 PM
Last Updated : 06 Mar 2024 02:42 PM

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் மார்ச் 11 வரை நீட்டிப்பு: இது 24-வது முறை

சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மார்ச் 11-ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவதால் புழல் சிறையிலிருந்து காணொலி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மார்ச் 11-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் 24வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு - இந்த நிலையில், அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கவுதமன், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்ற உத்தரவில், அமலாக்கத் துறையின் வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயித்துள்ளது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்படவுள்ளது. மேலும் இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகி வாதிட இருப்பதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அல்லி, வழக்கின் விசாரணையை மார்ச் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x