Published : 06 Feb 2018 08:43 AM
Last Updated : 06 Feb 2018 08:43 AM

ரஜினிக்கு எதிரான அவதூறு வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ரஜினிகாந்துக்கு எதிராக பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா தொடர்ந்த அவதூறு வழக்கை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திரைப்பட தயாரிப்பாளர் கஸ்தூரி ராஜாவுக்கு எதிராக பிரபல சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா, செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். அதில், நடிகர் ரஜினிகாந்தின் ஒப்புதலோடுதான் கஸ்தூரி ராஜாவுக்கு கடன் வழங்கியதாக போத்ரா தரப்பில் கூறப்பட்டது.

இதன்மூலம், தன்னிடம் பணம் பறிக்க போத்ரா திட்டமிட்டுள்ளதாக ரஜினிகாந்த் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டார். இதனால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக ரஜினிகாந்துக்கு எதிராக போத்ரா, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு போத்ரா ஆஜராகவில்லை என்று கூறி, வழக்கை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் போத்ரா மனு தாக்கல் செய்தார். நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்பு இந்த மனு மீதான விசாரணை நடந்தது.

அப்போது ரஜினிகாந்த் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘‘எனக்கு எதிராக தொடரப்பட்ட இந்த வழக்கை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்துவிட்டது. எனவே, இந்த மனுவும் விசாரணைக்கு உகந்தது அல்ல. ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நடந்த விசாரணைக்கு, தொடர்ந்து ஏன் ஆஜராகவில்லை என்பதற்கு மனுதாரர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. கீழ் நீதிமன்றத்தில் எனது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவை வேண்டுமென்றே திட்டமிட்டு மறைத்து, மனுதாரர் இந்த மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். எனவே இதை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என கோரியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, நீதிபதி எம்.வி.முரளிதரன், ‘‘ரஜினிகாந்துக்கு எதிரான அவதூறு வழக்கை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் மீண்டும் முறையாக விசாரிக்க வேண்டும். ஆனால் வழக்கு விசாரணைக்கு ரஜினிகாந்த் நேரில் ஆஜராகத் தேவையில்லை’’ என்று உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x