Published : 30 Jan 2018 09:22 PM
Last Updated : 30 Jan 2018 09:22 PM

பாஜக ஆட்சியில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் எத்தனை?- வாசன் கேள்வி

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு கடந்த 4 ஆண்டுகளில் எத்தனை புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறது என்பதை தெரிவிக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கி உள்ளது. குடியரசுத் தலைவரின் உரையில் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்தோ, மாநில உரிமைகளை பாதுகாப்பது குறித்தோ எவ்வித முக்கிய அறிவிப்புகளும் இடம்பெறவில்லை. அது வழக்கம்போல மத்திய அரசுக்கு சாதமான உரையாகவே உள்ளது.

இஸ்லாமியர்கள் எதிர்க்கும் முத்தலாக் மசோதாவை விரைந்து நிறைவேற்ற துடிக்கும் பாஜக வேற்றுமையில் ஒற்றுமை என்ற கலாச்சாரத்தை பேணி பாதுகாக்க தவறுகிறது. பாஜக ஆட்சியில் மாநில உரிமைகள் காக்கப்படவிலை. மக்கள் எவ்வித முன்னேற்றமும் அடையவில்லை. மக்கள் நலன் சார்ந்த போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் உரையில் சிறுபான்மை இன மக்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தற்போது குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியென்றால், இதுவரை எவ்வித வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படவில்லையா ? என சந்தேகம் எழுகிறது. ஆகவே, கடந்த 4 ஆண்டுகளில் எத்தனை வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்'' என்று வாசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x