Published : 20 Oct 2023 10:01 PM
Last Updated : 20 Oct 2023 10:01 PM

“எங்களுக்கு நாங்களே போட்டி; வேறு யாரும் போட்டியில்லை” - சீமான்

தருமபுரி: "சிறு உயிரினங்களுக்கு இரையாகட்டும் என்று அரிசி மாவில் கோலமிட்ட பெருமை கொண்ட தமிழனத்தை 60 ஆண்டுகால ஆட்சி இலவச அரிசிக்கு கையேந்த விட்டுள்ளது" என தருமபுரியில் நாம் தமிழர் கட்சி சீமான் தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் பொதுக்கூட்டம் ஆகியவற்றில் பங்கேற்க அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று(அக்.20) தருமபுரி வந்தார். நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியது, "மக்கள் மத்தியில் நாம் தமிழர் கட்சியின்மீது பெரும் எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் உள்ளது. இந்த மண்ணுக்கும் மக்களுக்குமான அரசியலை முன்னெடுத்து பேசுவது நாங்கள் தான். இளைய தலைமுறை பிள்ளைகளிடம் நாங்கள் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளோம்.

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் தான் வருகிறது. ஆனால், மாறுதலும் ஆறுதலும் இல்லை, வளர்ச்சியும் இல்லை. தேசத்தை நாசமாக்கிய ஒரே சொல் இலவசம் என்றார் குன்றக்குடி அடிகளார். இலவசங்கள், சலுகைகள் எதையும் தர வேண்டாம். எங்களுக்கான உரிமைகளை தாருங்கள் என்கிறோம் நாங்கள். கல்வியை தரமாக கொடுத்தால், பேருந்து பயணத்துக்கு பெற்றோரே பணம் செலுத்திக் கொள்வார்கள். நிரந்தர வருவாய் அளிக்கும் வளர்ச்சித் திட்டங்களை ஏற்படுத்துங்கள்.

மற்றவர்கள் கல் மாவு மூலம் கோலம் போட்டுக் கொண்டிருந்த காலத்தில், எறும்பு உள்ளிட்ட சிறு உயிரினங்களுக்கு இரையாகட்டும் என்று அரிசி மாவில் கோலம் போட்ட பெருமைமிக்க தமிழ் இன மக்களை, கடந்த 60 ஆண்டு கால ஆட்சி இலவச அரிசிக்கு கையேந்த வைத்துள்ளது. விளையாட்டில் மதம், கடவுள் சார்ந்த கோஷங்கள் மூலம் நம்மை கற்காலத்தை நோக்கி தள்ளிச் செல்கின்றனர். அடுத்த தலைமுறை பிள்ளைகள் சாதி, மதம், கவர்ச்சி ஆகியவை அண்ட முடியாத பெரும் நெருப்பாக வர வேண்டும்.

சாராயம் குடித்து இறந்தால் அதிக அளவில் இழப்பீடு. நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரன் இறந்தால் சொற்ப இழப்பீடு. மொத்தத்தில், இங்கிருப்பது மோசமான ஆட்சிமுறை. ஆளுநரை நீக்க வேண்டுமென பலர் வலியுறுத்துகின்றனர். ஆனால், நாங்கள் ஆளுநர் பதவியையே நீக்க வேண்டும் என்கிறோம். மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வருக்கு இல்லாத அதிகாரங்கள் ஆளுநருக்கு எங்கிருந்து வருகிறது. அரசு கொண்டுவரும் திட்டங்களை ஆதரித்து சட்டமாக்குவது தான் ஆளுநரின் பணி.

திரைப்படங்களை எதிர்க்கும்போதுதான் பளீர் வெளிச்சம் விழுகிறது. விஜய் நடித்த படத்துக்கு கர்நாடகாவில் எழுந்துள்ள எதிர்ப்பைப் பார்த்தால் அம்மாநில முதல்வர் சித்தராமையாவா அல்லது வாட்டாள் நாகராஜா என்ற கேள்வி எழுகிறது. தமிழகத்தில் கேஜிஎப் படம் வெளியானபோது எங்களால் தடுத்திருக்க முடியாதா?. ஆன்மிக பேரறிஞரான பங்காரு அடிகளார் தமிழர்களின் மெய்யியல் மரபில் செய்தது அனைத்தும் புரட்சி. அவரது கல்விச் சேவைகளும் முக்கியமானவை.

நாட்டின் சுதந்திரத்துக்கும், வளர்ச்சிக்கும் பெரும்பாடுபட்ட நம் முன்னோர்களின் அடையாளங்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளன. இங்கிருப்பவை அனைத்தும் திராவிட அடையாளங்கள் மட்டும் தான். உண்மை வரலாறு எழுச்சியை ஏற்படுத்தும் என்பதற்காகவே இவ்வாறு மறைக்கப்பட்டுள்ளன.

நீட் தேர்வை கொண்டுவந்தது காங்கிரஸ், ஆதரித்தது திமுக. இவ்வாறு முந்தைய ஆட்சியில் பெற்றெடுத்த குழந்தைகளை, பெரும்பான்மையுடன் இன்று ஆட்சியில் உள்ளவர்கள் வளர்த்தெடுக்கின்றனர். அமெரிக்கா இஸ்ரேலை ஆதரிப்பதால் இந்தியாவும் இஸ்ரேலை ஆதரிக்கிறது. பாலஸ்தீனம் தன் நிலப்பரப்பில் பிச்சையாக போட்ட நிலம் தான் இஸ்ரேல். அதில் இருந்து கொண்டு அவர்களின் நாட்டையே ஆக்கிரமிக்க முயற்சிப்பதால் தான் சண்டை வருகிறது. நாம் தமிழர் கட்சிக்கு யாரும் போட்டியில்லை, எங்களுக்கு நாங்கள் தான் போட்டி." இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்ச்சியின்போது, கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x