Published : 20 Oct 2023 05:27 AM
Last Updated : 20 Oct 2023 05:27 AM

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

கோப்புப்படம்

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நிலையில், உடனடியாக நேற்றே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்தஜூன் 14-ம் தேதி அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 8-வது முறையாக நீட்டிக்கப்பட்டு, அக்.20 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க முதன்மைஅமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருத்தில்கொண்டு2 முறை தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, அவருக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இந்த மனு மீதான விசாரணை நடந்தது.

செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆஜரானார். அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான மத்திய அரசின்கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேசன், அமலாக்கத்துறையின் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆகியோர் செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என கடுமையாக ஆட்சேபம் தெரிவித்து வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ‘‘ஜாமீனில் விடுவித்தால் மட்டுமே அவருக்கு மருத்துவ சிகிச்சை பெற முடியும் என்ற நிலைஇல்லை. குறிப்பாக, அவரது கடந்தகால நடவடிக்கைகள், தற்போது வரை இலாகா இல்லாத அமைச்சராக பதவியில் நீடிப்பது, அவரது சகோதரர் அசோக்குமார் தொடர்ந்து தலைமறைவாக இருப்பது, சோதனைக்கு சென்றவருமான வரித் துறை அதிகாரிகள் தாக்கப்பட்டது ஆகியவற்றைபார்க்கும்போது செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால், இந்த வழக்கின் சாட்சிகள், ஆதாரங்களை அவர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கலைக்கும் வாய்ப்புகள் உள்ளன என்ற முடிவுக்கு வருவதை தவிர்க்க இயலாது. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்க இயலாது’’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதி எஸ்.கே.கவுல் அமர்வில் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல்ரோஹத்கி, ஜாமீன் மனுவை அவசரவழக்காக 20-ம் தேதி (இன்று) விசாரிக்க வேண்டும் என முறையிட்டார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள்,இந்த மனு அக்.30-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x