Last Updated : 19 Oct, 2023 10:53 PM

 

Published : 19 Oct 2023 10:53 PM
Last Updated : 19 Oct 2023 10:53 PM

மதுரை | திறந்த வீடுகளுக்குள் புகுந்து நகை, பணம் திருடிய சகோதரர்கள் உட்பட 4 பேர் கைது: 180 பவுன், ரூ.9 லட்சம் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட நகை மற்றும் பணம்

மதுரை: கருப்பாயூரணி, சக்கிமங்கலம் பகுதியில் திறந்த வீடுகளுக்குள் புகுந்து நகை, பணம் திருடிய சகோதரர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். 180 பவுன், ரூ.9 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தனிப்படையை எஸ்பி சிவபிரசாத் பாராட்டினார்.

மதுரை மாவட்டம், கருப்பாயூரணி, சிலைமான் பகுதியில் கடந்த 2021 முதல் 3 ஆண்டாக திறந்த வீடுகளுக்குள் புகுந்து நகை, பணம் கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்தது. இவ்வாண்டில் மட்டும் அப்பகுதியில் சுமார் 12 வழக்குகள் பதிவாகின. ஒரே கும்பலைச் சேர்ந்தவர்களே இச்சம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம் என, போலீஸ் சந்தேகித்தது. இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவின் பேரில், டிஎஸ்பி கிருஷ்ணன் தலைமையில் காவல் ஆய்வாளர் மோகன், எஸ்ஐக்கள், குமரகுரு, கார்த்திக், காவலர்கள் காந்தி, கருப்பு உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

கடந்த 18ம் தேதி கல்மேடு சந்திப்பில் தனிப்படையினர் டூவீலரில் சென்ற இருவரை பிடித்தனர். கையுறை, ஆயுதங்கள் வைத்திருப்பது தெரிந்தது. அவர்கள் மதுரை மாவட்டம், சக்கிமங்கலம் இளமனூர் புதூரைச் சேர்ந்த பேசிமுத்து மகன்கள் சின்னச்சாமி (எ) நரி (24), சோனைசாமி (25) என தெரிந்தது. சக்கிமங்கலம், கருப்பாயூரணி பகுதியில் கடந்த 3 ஆண்டாக திறந்த கிடக்கும் வீடுகளுக்குள் இரவு, பகலில் புகுந்து நகை, பணம் திருடியதும் தெரியவந்தது.

இவர்களது பெரியம்மா ஆசைப் பொன்னு (55) இவரது மகன் பெரிய கருப்புச் சாமி (28) ஆகியோர் உடந்தையாக இருந்ததால் அவர்களும் கைது செய்யப்பட்டனர். திருடிய நகைகள், பணத்தை வீட்டை சுற்றிலும் மண்ணுக்குள் புதைத்து வைத்துள்ளனர். 180 பவுன் நகைகள், ரூ.9 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து எஸ்பி சிவபிரசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கைதான 4பேரும் ஒரே குடும்பத்தினர். ஒரே மாதிரி கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர். வீடுகள் திறந்து இருக்கும்போது, மட்டுமே நைசாக நுழைந்து திருடுவது, நகை, பணம் கிடைவில்லையெனில் தூங்கிக் கொண்டிருக்கும் நபர்கள் அணிந்து இருக்கும் நகையை மிரட்டி பறித்து தப்புவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

கடந்த 3 ஆண்டில் 25க்கும் மேற்பட்ட வழக்கு பதிவாகியுள்ளன. 240 பவுன் நகைகள் திருடு போகியுள்ளன. நகைகளை வீட்டை சுற்றிலும் பத்திரமாக புதைத்து வைத்துள்ளனர். தற்போது, இவர்களிடம் 180 பவுன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், திருடிய நகைகளை கொண்டு இடம் வாங்கி விற்று, வீடு கட்டியதாக தெரிகிறது. வாகனங்களும் வாங்கியுள்ளனர். திருட்டு நகையில் வீடு கட்டியிருந்தால் சட்டப்படி பறிமுதல் செய்யப்படும். இது தொடர்பாக போலீஸ் காவலில் விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளோம். இந்த தொடர் கைவரிசை சம்பவத்தில் துப்புத் துலங்கிய தனிப்படையினருக்கு வெகுமதி அளிக்கப்படும்.

மதுரை விக்கிரமங்கலம் அருகே சொத்து தகராறில் அண்ணன், தம்பிக்குள் ஏற்பட்ட தகராறில் சில தினத்துக்கு முன்பு அண்ணனுக்கு சொந்தமான வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இச்சம்பவத்தின் உண்மை நிலை அறியாமல், வெடிகுண்டு வீசி எரிக்கப்பட்டதாக உண்மைக்கு புறம்பாக கருத்து பதிவிட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்திடம் அக்.20 அன்று செக்கானூரணி போலீஸார் விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளோம். சட்டம், ஒழுங்கிற்கு எதிராக அவர் செயல்பட்டது தெரிந்தால் அவர் மீது வழக்கு பதிவு செய்வோம்.

குற்றங்கள் புதிய செயலி மூலம் கண்காணிக்கப்படும். கிராமப் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த முயற்சித்துள்ளோம் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x