Published : 07 Sep 2023 04:12 PM
Last Updated : 07 Sep 2023 04:12 PM

விதிகளை மீறி பேனர்கள் வைக்க அனுமதித்த அதிகாரிகள் மீதான நடவடிக்கை என்ன? - சென்னை ஐகோர்ட் கேள்வி

சென்னை: விதிகளை மீறி விளம்பர பேனர்கள் வைக்க அனுமதித்த அதிகாரிகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் சாலை நடுவில் வைக்கப்பட்ட விளம்பர பேனர் விழுந்து இளம்பெண் பலியானது, விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியை வரவேற்க கொடிக்கம்பம் அமைத்தபோது மின்சாரம் தாக்கி சிறுவன் பலியானது போன்ற சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, விதிகளை மீறி விளம்பர பேனர்கள் வைக்க அனுமதித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்குகள், தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தன.

அப்போது அரசுத்தரப்பில், "டிஜிட்டல் பேனர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பேனர் கலாசாரம் ஒழிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி செயல்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக சஸ்பெண்ட் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "இந்தச் சம்பவங்கள் தொடர்பாக பதியப்பட்ட வழக்குகளின் விவரங்களை தெரிவிக்க வேண்டும். மேலும், அனுமதிபெற்று வைக்கப்படும் பேனர்கள், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக வைக்கப்படுகின்றன. விழுப்புரத்தில் சிறுவன் பலியான சம்பவத்தைக் குறிப்பிட்டு, கட்சிகளின் சார்பில் கொடிக்கம்பங்கள் அமைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சித் தலைமை அறிவிக்க வேண்டும்" என்றனர்.

அப்போது விழுப்புரம் சம்பவத்தில் தொடர்புடைய திமுக பிரமுகர் தரப்பில், திமுக சார்பில் ஏற்கெனவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, விதிகளை மீறி விளம்பர பேனர்கள் வைத்த விவகாரத்தில், தவறிழைத்த அதிகாரிகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள், அவர்களுக்கு எதிரான குற்ற வழக்கு தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை அக்டோபர் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x