Published : 01 Aug 2023 07:40 AM
Last Updated : 01 Aug 2023 07:40 AM

சென்னை - திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்க திட்டம்

கோப்புப்படம்

சென்னை: தெற்கு ரயில்வே சார்பில், சென்னை சென்ட்ரல் - மைசூரு, சென்னை சென்ட்ரல் - கோவை, காசர்கோடு - திருவனந்தபுரம் இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த 3 ரயில்களில் சராசரி டிக்கெட் முன்பதிவு 100 சதவீதத்துக்குமேல் இருக்கின்றன.

இதனிடையே, சென்னை எழும்பூர் - திருநெல்வேலி மற்றும் சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே வந்தே பாரத் ரயிலை இயக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில், சென்னை - திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. ரயில்வே வாரியம் ஒப்புதல் கிடைக்காததால், தற்போது அந்த ரயில் சேவை தொடங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தின் தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில், சென்னை - திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை விரைவில் தொடங்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ரயில் சேவை தொடங்கும் தேதி இன்னும் முடிவாகவில்லை. வந்தே பாரத் ரயிலை பராமரிக்க மதுரை கோட்டம் திருநெல்வேலி பணிமனையில் பிட்லைன் அமைத்து, இந்த ரயிலை பராமரிக்க தேவையான பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதலில், சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே சோதனை ஓட்டம் நடைபெறும். அதன்பிறகு, வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை- திருநெல்வேலி இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை ஆகஸ்ட் 6-ம் தேதி தொடங்க இருப்பதாக செய்திகள் வருகின்றன. அந்த தகவல் உண்மையல்ல. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x