Published : 20 Jul 2023 05:19 AM
Last Updated : 20 Jul 2023 05:19 AM

இதுவரை 311.61 கோடி கட்டணமில்லா பயணம்: சுய அதிகாரம் கிடைத்துள்ளதாக பெண்கள் கருத்து

சென்னை: பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தில் இதுவரை 311.61 கோடி கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பேருந்து பயணத் திட்டம் சுய அதிகாரம் கிடைக்க வழி செய்வதாக பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளில் பெண்களுக்குக் கட்டணமில்லாப் பயணத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 2 ஆண்டுகள் 2 மாதங்கள் நிறைவு பெற்றுள்ளன.

பயணிகள் எண்ணிக்கை உயர்வு: மாநிலத்தில் மொத்தம் இயக்கப்படும் 9,620 நகரப் பேருந்துகளில் 74.46 சதவீத பேருந்துகள் சாதாரண கட்டண நகர பேருந்துகளாக இயக்கப்படுகின்றன. நடப்பாண்டில் நாளொன்றுக்கு 49.06 லட்சம் பெண்கள் பேருந்தில் பயணிக்கின்றனர். இது மொத்த பயணிகளின் எண்ணிக்கையில் 66.03 சதவீதம் ஆகும்.இத்திட்டத்தில் இதுவரை 311.61கோடி கட்டணமில்லா பயணங்கள் பெண்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான கட்டணத் தொகை ரூ.4,985.76 கோடி.

இத்திட்டம் திருநங்கைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டதில், நாளொன்றுக்கு சுமார் 3,013 திருநங்கைகள் பயணிக்கின்றனர். அவர்களால் இதுவரை 18.04 லட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான கட்டணத் தொகை ரூ.2.88 கோடி.

இத்திட்டத்தில் கல்லூரி மாணவிகள், சிறு தொழில் செய்யும் இல்லத்தரசிகள், வீட்டு வேலை, துணிக்கடை, கட்டிட வேலை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வோர் பயனடைந்துள்ளனர். பெண்களுக்கான கட்டணமில்லாப் பேருந்து பயணத்துக்காக நடப்பாண்டில் ரூ.2,800 கோடி, திருநங்கைகளின் பயணத்துக்கு ரூ.1.21 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

திட்டக்குழு ஆய்வு: மாநிலத் திட்டக்குழுவின் உறுப்பினர் எம்.விஜயபாஸ்கர், கொள்கை ஆலோசகர்களுடன் இணைந்து, கட்டணமில்லாப் பயணத்தால் பெண்கள் அடையும் பயன் குறித்து நாகப்பட்டினம், மதுரை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு நடத்தினார். அதில், பெண்கள் மாதம் ரூ.756 முதல் ரூ.1,012 வரையும், சராசரியாக ரூ.888 சேமிப்பதும் தெரிய வந்துள்ளது.

இத்திட்டத்தில் பயனடைந்தோரில் 39 சதவீதம் பேர் பட்டியலினத்தவர்கள், 21 சதவீதம் பேர்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், 18 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். பயனாளர்களில் 50 சதவீதம் பேர் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

ஆய்வின்போது, பயணத் தேவைகளுக்காக குடும்ப உறுப்பினர்களைச் சார்ந்திருப்பது குறைந்திருப்பதாகவும், கவுரவமாக நடத்தப்படுதல், சுய அதிகாரமளித்தல் ஆகியவற்றுக்கு திட்டம் பங்களிப்பதாக பெண்கள் தெரிவித்துள்ளனர். சேமிக்கப்படும் தொகை வீட்டுச் செலவுகளுக்குப் பயன்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

சென்னையில் கோயம்பேடு – திருவொற்றியூர், தாம்பரம் - செங்கல்பட்டு மற்றும் பிராட்வே - கண்ணகி நகர் ஆகிய வழித்தடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், பெண் பயணிகள் மாதத்துக்கு சுமார் 50 பயணங்களை மேற்கொள்வதும், அவர்கள் மாதம் ரூ.858 சேமிப்பதும் தெரிய வந்துள்ளது. நகரங்களை ஒப்பிடும்போது கிராமப்புறங்களைச் சேர்ந்த பெண்கள் அதிகம் பயனடைகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x