Published : 20 Jul 2023 05:10 AM
Last Updated : 20 Jul 2023 05:10 AM

மத்திய அரசின் மென்பொருள் குறைபாட்டால் தாமதம் - மகப்பேறு நிதியுதவி நிறுத்தப்படவில்லை என அமைச்சர் விளக்கம்

சென்னை: தமிழகத்தில் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் நிறுத்தப்படவில்லை. மத்திய அரசின் மென்பொருளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளால் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்கள், கருவுற்ற 12 வாரத்துக்குள் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று ஆதார் அட்டை, வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களுடன் தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு ‘பிக்மி’ எண் வழங்கப்பட்டதும், முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தில் இருந்து அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.2,000 வரவு வைக்கப்படும். 4-வது மாதத்துக்கு பிறகு, இரண்டாவது தவணையாக ரூ.2,000 வழங்கப்படும்.

இதற்கிடையே, உடல்திறனை மேம்படுத்த இரும்புச்சத்து டானிக், உலர் பேரீச்சை, புரதச்சத்து பிஸ்கட், ஆவின் நெய், அல்பெண்டசோல் மாத்திரை, கதர் துண்டு அடங்கிய ரூ.2,000 மதிப்புள்ள பெட்டகம் 2 முறை கொடுக்கப்படும்.

அரசு மருத்துவமனையில் பிரசவம் முடிந்த பிறகு, 3-வது தவணையாக ரூ.4,000, பேறு காலம் முடிந்து குழந்தைக்கு தடுப்பூசி போடும் காலத்தில் 4-வது தவணையாக ரூ.4,000, குழந்தைக்கு 9-வது மாதம் முடிந்தவுடன் 5-வது தவணையாக ரூ.2,000 வழங்கப்படும். இவ்வாறு ரூ.14,000 ரொக்கம், ரூ.4,000 மதிப்புள்ள பெட்டகம் என ரூ.18,000 மதிப்பிலான உதவி வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நிதியுதவி யாருக்கும் கிடைப்பது இல்லை என்று புகார் எழுந்தது. இதுதொடர்பாக செய்திகளும் வெளியாகின.

இந்நிலையில், இதற்கு விளக்கம் அளித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருப்பதாவது: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின்கீழ் கடந்த 2006-ல் ரூ.6,000 வழங்கப்பட்டது. அது தற்போது ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் பங்களிப்பு ரூ.3,000 மட்டுமே. தமிழகத்தில் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின்கீழ் கடந்த 2006 முதல் தற்போது வரை 1.14 கோடி பெண்களுக்கு ரூ.11,702 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பிரதமர் மாத்ருவந்தனா திட்டத்துடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் இணையவழி பதிவேற்றத்தில் சில குறைபாடுகள் ஏற்பட்டதால், பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் நிதியுதவி விடுவிக்கப்படவில்லை.

இதுதொடர்பாக மாநில சுகாதாரத் துறை சார்பில் உயர்நிலை குழு அமைக்கப்பட்டு, 3 ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன. டெல்லியில் உள்ள தேசிய தகவல் மையத்துக்கு தமிழக சுகாதார திட்ட உறுப்பினர்கள் சென்று, மென்பொருள் பொறியாளர்களுடன் நேரடியாக ஆய்வு நடத்தினர்.

இந்த குறைபாடுகள் காரணமாகவே, இத்திட்டத்தில் தற்காலிகமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. அத்திட்டம் நிறுத்தப்படவில்லை. நிலுவையில் உள்ள பயனாளிகளுக்கு விரைவில் நிதியுதவி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x