Published : 18 Jul 2023 05:16 PM
Last Updated : 18 Jul 2023 05:16 PM

சட்டவிரோதமாக விற்கப்பட்ட கோயில் சொத்துகளை மீட்க நடவடிக்கை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட கோயில் சொத்துகள் குறித்து விசாரணை நடத்தி, ஆவணங்களை சேகரித்து, அச்சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது சொத்துக்கு பட்டா வழங்க உத்தரவிடக் கோரி குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்து சமய அறநிலையத் துறை தரப்பில், "குறிப்பிட்ட அந்த நிலம், நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலம். எனவேதான், அந்த நிலத்துக்கு பட்டா வழங்க ஆட்சேபம் தெரிவித்தது” என்று கூறப்பட்டது.

இதையடுத்து மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அறநிலையத் துறை தரப்பில், கோயில் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழகம் முழுவதும் கோயில் நிலங்கள், அறநிலையத் துறைக்கு தெரியாமல், அறங்காவலர்களால் சட்டவிரோதமாக மூன்றாம் நபர்களுக்கு விற்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அறநிலையத் துறை விசாரணை நடத்தி, ஆவணங்களை சேகரித்து, நிலங்களை தானம் அளித்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில்,கோயில் சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும், பேராசை பிடித்த சிலரின் இந்த மோசடியில் நிலங்களை வாங்கியவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும் அவர்களுக்கு கருணை காட்ட முடியாது எனக் கூறி, சொத்துக்கு பட்டா வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x