Published : 16 Nov 2022 06:32 AM
Last Updated : 16 Nov 2022 06:32 AM

பரிசு பெற்ற குறுங்கட்டுரைகள்: எனக்குப் பிடித்த நேரு

இந்தியாவின் சிற்பி! - ஜப்பானியக் குழந்தைகள் கேட்டார்கள் என்பதற்காகக் குட்டி யானையை அனுப்பி வைத்த அவரது அன்பை என்னவென்று சொல்வது! அவர் நவீன இந்தியாவின் சிற்பி. ’தொழிலே நாட்டிற்கு எழில்’ என முழங்கியதோடு பல தொழிற்சாலைகளையும் திறந்தவர்.

நாட்டின் வளர்ச்சிக்காக உறங்காது உழைத்தார். அவர் போட்ட ஐந்தாண்டுத் திட்டங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்திட்டன. விவசாயத்துக்காக நீர்ப்பாசன வசதியை உருவாக்கியவர். மகள் இந்திராவுக்கு நேரு எழுதிய கடிதங்கள், ‘உலக சரித்திரம்’ நூலாக மாறியிருக்கின்றன. முற்போக்குச் சிந்தனையும் குழந்தை உள்ளமும் கொண்ட நேருவை உலகமே பாராட்டி மகிழ்கிறது. - ஆர். சுப்ரியா, 8-ம் வகுப்பு, வேலம்மாள் போதி கேம்பஸ், மதுரை.

தந்தை நேரு: சுதந்திரப் போராட்ட வீரர், குழந்தைகள் மீது அன்பு கொண்டவர், இந்தியாவின் முன்னேற்றத்துக்கு உழைத்தவர் என்பதை எல்லாம் கடந்து, இந்திராவின் தந்தையான நேருவே எனக்கு மிகவும் பிடித்தமானவர்! இப்போதும் குழந்தைகளிடம் மனம்விட்டுப் பேசாத பெற்றோர் இருக்கிறார்கள்.

ஆனால், 80 ஆண்டுகளுக்கு முன்பே தான் அகமத் நகர் சிறையில் இருந்தபோது, மகள் இந்திராவுக்கு அவர் கடிதங்களை எழுதினார். அவை சாதாரண கடிதங்கள் அல்ல, வரலாறும் அறிவியலும் நிரம்பிக் கிடக்கும் அறிவுப் பெட்டகம். அந்தக் கடிதங்கள் The Discovery of India, Glimpses of World History ஆகிய புத்தகங்களாக வெளிவந்த பிறகு உலகம் முழுவதிலும் குழந்தைகள் படித்து, அறிவைப் பெருக்கிக்கொண்டார்கள்! - க.ஸ். கவின், 8-ம் வகுப்பு, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மணலூர்ப்பேட்டை, கள்ளக்குறிச்சி.

ரோஜாவின் ராஜா! - ரோஜாவின் ராஜாவைப் பிடிக்காதவர்கள் கிடையாது. நேரு அளவுக்குக் குழந்தைகளை நேசித்த தலைவர்கள் யாரும் இல்லை! குழந்தைகளுக்காகச் சிந்தித்து, அனைவருக்கும் கல்வி கிடைக்க வழிசெய்தவர். ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களைக் கொண்டுவந்தவர். அணி சேரா இயக்கத்தின் தலைவராகத் தலை நிமிர்ந்து நின்றவர். உலகத் தலைவர்கள் போற்றும் ஒப்பற்றத் தலைவராக மிளிர்ந்தவர்.

தொழிற்துறை, விவசாயம், மருத்துவம் போன்ற துறைகளில் நேரு மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகளால்தாம் நாம் இன்று முன்னேறியவர்களாக இருக்கிறோம். பிரதமராக மட்டுமல்லாமல் சிறந்த எழுத்தாளராகவும் உலகம் கொண்டாடும் நேருவே எனக்குப் பிடித்த தலைவர். - கே. பாலகிருஷ்ணன், 11-ம் வகுப்பு, ஐசிஎஃப் மேல்நிலைப் பள்ளி, சென்னை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x