Published : 16 Nov 2022 06:48 AM
Last Updated : 16 Nov 2022 06:48 AM

பயிர் காப்பீட்டுக்கான காலவரம்பை நவம்பர் இறுதி வரை நீட்டிக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழகத்தின் டெல்டா உள்ளிட்ட 27 மாவட்டங்களில் பயிர் காப்பீட்டுக்கான காலவரம்பை நவம்பர் இறுதி வரை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகளின் உடனடி கோரிக்கையான பயிர் காப்பீட்டுக்கான காலவரம்பை நீட்டிப்பது குறித்து தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். வடகிழக்கு பருவமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஆய்வு செய்தேன். செப். 15-ம் தேதி முதல் தொடங்கிய சம்பா, தாளடி, பிசானம் ஆகிய சிறப்பு பருவத்தில், விவசாயிகள் பயிர் காப்பீட்டுக்கான பதிவை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைகளால் தொடர்ச்சியான விடுமுறைகள் காரணமாக, பொது சேவை மையங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் சேவைகளை பல விவசாயிகள் பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பயிர் காப்பீட்டுக்கான பதிவினை அவர்கள் தொடர்ந்து மேற்கொள்ள இயலவில்லை. அதனைத் தொடர்ந்து இடைவிடாத மழை பெய்துவருவதாலும், வடகிழக்கு பருவமழை காரணமாக பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் அதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்தடை ஆகிய காரணங்களாலும் அவர்கள் காப்பீட்டு பதிவை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. ஏற்கெனவே பயிர் காப்பீடு செய்ய நிர்ணயிக்கப்பட்ட நவம்பர் 15 என்ற காலவரம்பை 30-ம் தேதி வரை நீட்டிக்கும்படி, டெல்டா மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை, மதுரை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், தேனி, திருச்சி, அரியலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஈரோடு, தருமபுரி, விழுப்புரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் சிவகங்கை ஆகிய 27 மாவட்டங்களில் பயிரிடப்படும் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கான பயிர் காப்பீடுக்கான காலக்கெடுவை நவம்பர் 15-ல் இருந்து 30-ம் தேதி வரை நீட்டிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். வெள்ளப்பெருக்கு, மின்தடை ஆகிய காரணங்களால் விவசாயிகள் காப்பீட்டு பதிவு மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x