Published : 06 May 2022 07:40 AM
Last Updated : 06 May 2022 07:40 AM

பேட்டிங் செயல்திறனே எங்களை வீழ்த்திவிட்டது: சிஎஸ்கே கேப்டன் தோனி வருத்தம்

புனே: ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது சென்னை அணி. போட்டி முடிவடைந்ததும் சென்னை அணியின் கேப்டன் தோனி கூறும்போது, “பெங்களூரு அணியை 173 ரன்களுக்குள் சிறப்பாகவே கட்டுப்படுத்தினோம். ஆட்டத்தின் பிற்பாதியில் ஆடுகளத்தின் மேற்பரப்பு சிறப்பாக இருக்கும் என்றே உணர்ந்தேன். ஆனால் பேட்டிங் திறன் எங்களை வீழ்த்திவிட்டது.

இலக்கை துரத்தும்போது என்ன தேவை என்று பேட்ஸ்மேன்களுக்கு தெரியும், சில சமயங்களில் உள்ளுணர்வைக் கட்டுப்படுத்தி, உங்கள் ஷாட்களை விளையாடுவதற்குப் பதிலாக நிலைமை என்ன கோருகிறது என்பதைப் பார்க்க வேண்டும். எங்களிடம் நல்ல தொடக்கம் இருந்தது, கைவசம் விக்கெட்டுகள் இருந்தன, ஆடுகளத்தின் மேற்பரப்பும் சிறப்பாக இருந்தது, ஆனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம்.

இலக்கை துரத்துவது என்பது கணக்கீடுகளைப் பற்றியது. அதேவளையில் முதலில் பேட்டிங் செய்வது அதிக அளவிலான உள்ளுணர்வைப் பற்றியது. களத்தில் இருக்கும் வீரரே முடிவு செய்ய வேண்டும். உங்களிடம் எத்தனை புள்ளிகள் உள்ளன என்பது குறித்து சிந்தித்தால் கவனம் எளிதாக சிதறும். புள்ளிகள் அட்டவணையில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதை விட செயல்முறையே முக்கியம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x