Published : 28 Mar 2022 09:27 PM
Last Updated : 28 Mar 2022 09:27 PM

IPL 2022 | ஷமியின் வேகத்தில் வீழ்ந்த டாப் ஆர்டர் - இளம் வீரர்களின் அதிரடியால் மீண்ட லக்னோ

மும்பை: வான்கடே ஸ்டேடியத்தில் நடந்து வரும் ஐபிஎல் டி20 தொடரின் நான்காவது ஆட்டத்தில் லக்னோ அணி 158 ரன்கள் குவித்துள்ளது.

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதி வருகின்றன. இரு அணிகளுமே, ஐபிஎல் களத்துக்கு புதிதானது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கியது. வான்கடே மைதானத்தில் நடந்து வரும் இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார்.

குயின்டன் டி காக் - கேஎல் ராகுல் ஜோடி துவக்கம் கொடுத்தது. இந்த தொடரில் மிகவும் அபாயகரமான ஒப்பனர்களாக கருதப்படும் இந்த இருவரையும் முகமது ஷமி அடுத்தடுத்த ஓவர்களில் தனது வேகத்தால் வீழ்த்தினார். முதல் ஓவரின் முதல் பந்திலேயே கேஎல் ராகுலை டக் அவுட் செய்த ஷமி, தனது அடுத்த ஓவரில் 7 ரன்கள் எடுத்திருந்த குயின்டன் டி காக்கை கிளீன் போல்டக்கினார்.

இவர்கள் மட்டுமில்லாமல், தனது மூன்றாவது ஓவரில் மனீஷ் பாண்டேவையும் பெவிலியன் நோக்கி நடக்க வைத்தார் ஷமி. போதாக்குறைக்கு வருண் ஆரோனும் அதிரடி ஆட்டக்காரர் எவின் லூயிஸை அவுட் ஆக்க நான்கு ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது லக்னோ. ஐந்தாவது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த தீபக் ஹூடாவும், ஆயுஷ் பதோனியும் அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் குஜராத் பந்துவீச்சை பயமில்லாமல், சிக்ஸர் பவுண்டரிகளாக விளாசினார். தீபக் ஹூடா 55 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரஷீத் கான் பந்தில் அவுட் ஆனார்.

ஆனாலும் மறுமுனையில் இருந்த ஆயுஷ் பதோனி தனது அதிரடியை தொடர்ந்தார். அவரும் அரைசதம் கடந்து அணியை மீட்டெடுத்தார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் லக்னோ அணி 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக ஷமி மூன்று விக்கெட்டுகளையும், வருண் ஆரோன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x