Published : 28 Mar 2022 06:25 PM
Last Updated : 28 Mar 2022 06:25 PM

'ஆரம்பத்திலேயே கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியது ஏன்?' - பயிற்சியாளர் பிளமிங் விளக்கம்

மும்பை: முதல் போட்டியின் தோல்விக்கு பின்பு, அணியின் பாணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் ஆரம்பித்த முதல் சீசனில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த மகேந்திர சிங் தோனி சில நாட்கள் முன் கேப்டன் பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தார். ஜடேஜா தலைமையில் சென்னை அணி முதல் போட்டியை சனிக்கிழமை சந்தித்தது. கொல்கத்தா அணிக்கு எதிரான அந்தப் போட்டியில் தோல்வியை தழுவியது. எனினும், அடுத்த ஆட்டத்துக்காக தயாராகி வருகிறார் சென்னை அணி வீரர்கள்.

இதனிடையே, ஜடேஜாவை கேப்டனாக தேர்வு செய்வது தொடர்பாக கடந்த ஆண்டே தோனி விவாதித்தார் என்று சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார். ஸ்டீபன் பிளமிங் இது தொடர்பாக கூறும்போது, "கடந்த சீசனே கேப்டன் மாற்றம் குறித்து தோனி என்னிடம் விவாதித்தார். இது முழுக்க முழுக்க தோனியின் முடிவே. ஜடேஜாவுக்கு சீசன் முழுவதும் கேப்டன் பொறுப்பை கொடுக்க வேண்டும் என்று தோனி நினைத்திருக்கலாம்.

அதனாலேயே தொடரின் ஆரம்பத்தில் தனது முடிவை அறிவித்துள்ளார். அணி உரிமையாளர் சீனிவாசனிடம் தெரிவித்த தோனி, அதன்பின்னர் அவர் மூலமாகவே அணிக்கு இந்த விவரம் தெரிவிக்கப்பட்டது. தோனியின் முடிவை நாங்கள் 100 சதவீதம் மதிக்கிறோம். புதிய கேப்டனாக ஜடேஜா பொறுப்பேற்றுருப்பதால் இனி சில சிறிய மாற்றங்கள் இருக்கலாம். கேப்டன் பதவி இல்லை என்பதற்காக ஒருவரை நிராகரிக்க முடியாது.

தோனியும் அணியின் ஒரு பகுதி. எனவே, சிறிய மாற்றங்களுடன் இந்த தொடரை சிறப்பாக முயற்சித்து வருகிறோம். முதல் போட்டி என்பதால், கொஞ்சம் பதற்றத்துடன் கொல்கத்தா அணிக்கு எதிராக போட்டியை துவக்கினோம். சூழல்கள் குறித்து மதிப்பிட்டு வருகிறோம். முன்னேறுவதற்கு இன்னும் காலங்கள் உள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x