Published : 18 Mar 2024 06:09 PM
Last Updated : 18 Mar 2024 06:09 PM

“எந்த சங்கடமும் இல்லை... நல்ல அனுபவமாக இருக்கும்” - ரோகித் குறித்து ஹர்திக் பாண்டியா

மும்பை: "எனது கேப்டன்சியின் கீழ் விளையாடுவது ரோகித் சர்மாவுக்கு சங்கடமாக இருக்காது. இது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்" என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டது குறித்து முதல்முறையாக பேசினார். அதில், "ரோகித் சர்மா உடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன். நிச்சயம் இந்த சீசனில் எந்த வித்தியாசமும் இருக்காது. ஏனென்றால் எனக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், ரோகித் உதவுவார். ரோகித் இந்திய அணியின் கேப்டனாகவும் இருப்பது எனக்கு உதவும்.

அவரின் தலைமையில் உள்ள இந்திய அணி நிறைய சாதனைகளை படைத்துள்ளது. அவரது கேப்டன்சியில் மும்பை என்ன சாதித்ததோ, இனிமேல், அதனை நான் முன்னெடுத்துச் செல்கிறேன். சீசன் முழுவதும் அவர் என் தோளில் கை வைத்திருப்பார் என்று எனக்குத் தெரியும். இதில் எந்த சங்கடமும் இல்லை. இது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்.

எனது கிரிக்கெட் பயணத்தில் பெரும்பான்மையான பகுதி ரோகித்தின் கேப்டன்சியின் கீழ் விளையாடியிருக்கிறேன். ரோகித்தை இன்னும் சந்தித்து பேசவில்லை. பயிற்சியில் அவரை சந்தித்து பேசுவேன்" என்று தெரிவித்தார்.

2013-ம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மா இந்த சீசனில் அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியா ட்ரேடிங் முறையில் மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

ரோகித் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பைகளை வென்று சாம்பியன் பட்டத்தை பெற்றது. கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்ந்து சர்ச்சையாக பேசப்பட்டு வரும் நிலையில் ஹர்திக் பாண்டியா முதல்முறையாக இதுதொடர்பாக பேசியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x