Published : 23 Sep 2023 03:41 AM
Last Updated : 23 Sep 2023 03:41 AM

IND vs AUS 1st ODI | ஒரு ஸ்வீப் ஷாட் கூட ஆடாத சூர்யகுமார் யாதவ் - ஆஸி. போட்டியில் ட்ரோலுக்கு முற்றுப்புள்ளி

மொகாலி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஒரு ஸ்வீப் ஷாட் கூட சூர்யகுமார் யாதவ் விளையாடவில்லை.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் ருதுராஜ் - கில் மற்றும் கே.எல்.ராகுல் - சூர்யகுமார் யாதவ் இடையே அபார கூட்டணி அமைந்திருந்தது அணியின் வெற்றிக்கு உதவியது. குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவின் ஃபார்ம் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் சூர்யகுமார் யாதவ்வின் ஆட்டம் நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இருந்தது.

ஒருநாள் கிரிக்கெட்டில் மோசமான சராசரி வைத்திருக்கும் சூர்யகுமார் யாதவுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வருவது விமர்சனம் செய்யப்பட்டு வந்தது. போதாக்குறைக்கு எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் நிச்சயம் சூர்யகுமார் யாதவ் இருப்பார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் பேசியதும் விமர்சன கணைகளை சூர்யாவை நோக்கி வீசவைத்தது.

இப்படியான நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கேப்டன் கே.எல் ராகுல் உடன் இணைந்து சூர்யகுமார் யாதவும் பொறுப்புடன் நிதானமாக ஆடினர். இருவரும் இணைந்து 80 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சூர்யகுமார் யாதவ், 49 பந்துகளில் அரைசதம் பதிவு செய்து ஆட்டமிழந்தார்.

அதிலும் குறிப்பாக, ஒரு ஸ்வீப் ஷாட் கூட இன்றைய போட்டியில் ஆடவில்லை. ஸ்வீப் ஷாட் ஆடுவதில் கில்லாடியான அவர் ஆசிய கோப்பையில் வங்கதேசம் அணியுடனான ஆட்டத்தில் ஸ்வீப் ஷாட் ஆடும்போது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால், அவரை ஸ்வீப் ஷாட் சூர்யா என மீம் கன்டென்ட் ஆக ட்ரோல் செய்திருந்தார்கள். இந்நிலையில், அதற்கு ஆஸி. க்கு எதிரான போட்டியில் விடை கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய சூர்யகுமார், "இன்னிங்ஸின் இறுதிவரை பேட்டிங் செய்து அணியை வெற்றிபெற வைக்க வேண்டும் என முயற்சிக்கிறேன். ஒருநாள் கிரிக்கெட் பார்மெட்டில் விளையாடத் தொடங்கிய காலத்தில் இருந்து இப்படியான ஒரு இன்னிங்ஸை விளையாட வேண்டும் என்பது எனது கனவு. துரதிர்ஷ்டவசமாக இன்று அதைச் செய்ய முடியவில்லை. எனினும், இன்றைய ரிசல்ட்டில் மகிழ்ச்சி.

ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் எனக்கு என்ன நடக்கிறது என்பதை நான் யோசித்துக் கொண்டிருந்தேன். நான் களத்தில் அவசரப்படுவதை உணர்ந்தேன். எனவே தான் மெதுவாக விளையாட்டினாலும், ஆழமாக நீண்ட நேரம் விளையாட முடிவு செய்தேன். நான் ஸ்வீப் விளையாடாதது இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன். ஸ்ட்ரைட் ட்ரைவ்களை இன்றைய ஆட்டத்தில் நிறைய ஆடினேன். இதே வழியில் தொடர்ந்து பேட்டிங் செய்யவும், இந்தியாவுக்காக கேம்களை வெல்லவும் முயற்சிப்பேன்" என்று வெளிப்படையாக தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x