Published : 31 Dec 2022 06:23 AM
Last Updated : 31 Dec 2022 06:23 AM

இந்தியாவில் கரோனா பாதிப்பு பெரியளவில் இருக்காது - நிபுணர் தகவல்

ஸ்ரீநகர்: காஷ்மீரிலுள்ள ஸ்கிம்ஸ் மருத்துவமனை இயக்குநராக டாக்டர் பர்வேஸ் கவுல் உள்ளார். சீனாவில் கரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரான் பரவிவரும் வேளையில் அது இந்தியாவில் பெருமளவு பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று டாக்டர் பர்வேஸ் கவுல் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கரோனா வைரஸை முற்றிலுமாக ஒழித்து விட முடியுமா என்று கேட்டால் அதற்குப் பதில் இல்லை என்பதுதான். சீனாவைப் போல கரோனாவிலிருந்து பல்வேறு வகை புதிய பிறழ்வுகள் தோன்றினால், அவ்வப்போது அதன் தாக்கம் இருக்கும். இந்தியாவிலும் இதுபோன்ற வைரஸ் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது.

அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இதுபோன்ற வைரஸ் இந்தியாவில் பரவி சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆனால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது.

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு எதிர்ப்புச் சக்தியைப் பெற்றுள்ளனர். எனவே, அவர்களை கரோனா வைரஸ் தாக்கும் வாய்ப்பு குறைவு. மேலும் ஏராளமான பூஸ்டர் தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

பரவலான நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக நமது நாட்டு மக்களுக்கு நன்மை ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும்.

இதுவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக பூஸ்டர் ஊசியைப் போட்டுக் கொள்ளவேண்டும். இதற்காக மத்திய அரசு வெளியிடும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x