Published : 10 Nov 2015 12:54 PM
Last Updated : 10 Nov 2015 12:54 PM
அணு ஆயுதங்களை சுமந்தபடி 4 ஆயிரம் கி.மீ. தொலைவில் உள்ள எதிரி நாட்டின் இலக்கை தாக்கும் திறன் வாய்ந்த அக்னி 4 எவுகணை நேற்று 5-வது முறையாக வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சக செய்தித்தொடர்பாளர் சிதான்ஷுகர் நேற்று கூறும்போது, “ஒடிசா மாநிலத்தின் வீலர் தீவில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஏவுகணை செலுத்து மையத்திலிருந்து காலை 9.45-க்கு அக்னி 4 ஏவுகணை ஏவப்பட்டது. இது வெற்றிகரமாக திட்டமிட்ட இலக்கை தாக்கியது. இந்த ஏவுகணை அனைத்து குறிக்கோளையும் எட்டியது, கடற்கரையில் அமைந்துள்ள டெலிமெட்ரி, எலக்ட்ரோ-ஆப்டிகல் மையங்கள், ராடார் மையங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த சோதனை திட்ட இயக்குநர் டெசி தாமஸ் தலைமையில் நடைபெற்றது” என்றார்.
தரையிலிருந்து மற்றொரு தரையில் உள்ள இலக்கை தாக்கும் திறன் வாய்ந்த இந்த ஏவுகணை, பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டது என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (டிஆர்டிஓ) அதிகாரிகள் தெரிவித்தனர்.
20 மீட்டர் நீளம், 17 டன் எடை, 2 நிலைகளைக் கொண்ட இந்த எவுகணை 5-வது முறையாக பரிசோதித்து பார்க்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
அக்னி 1, 2, 3 மற்றும் பிரித்வி ஏவுகணைகள் ஏற்கெனவே இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. போதுமான அளவு ஏவுகணைகள் ஆயுதக் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் எதிரி நாட்டின் தாக்குதலை சமாளிக்கும் திறனை இந்தியா பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT