Last Updated : 19 Apr, 2020 03:52 PM

 

Published : 19 Apr 2020 03:52 PM
Last Updated : 19 Apr 2020 03:52 PM

கோவிட்-19 நோயைத் தோற்கடிக்கும் நம்பிக்கையை காக்கியே எனக்குத் தந்தது: நோயிலிருந்து மீண்ட காவல் உதவி ஆய்வாளர் பேட்டி

கரோனா நோயிலிருந்து மீண்ட டெல்லி போக்குவரதது காவல்துறையின் உதவி ஆய்வாளர் ஜீத் சிங்.| படம்: ஏஎன்ஐ.

புதுடெல்லி

கோவிட்-19 நோயைத் தோற்கடிக்கும் நம்பிக்கையை காக்கியே எனக்குத் தந்தது என்று டெல்லி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவரும் வேளையில் அதிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் ஓரளவு நமக்கு நம்பிக்கையைத் தந்து கொண்டிருக்கிறது. மத்திய சுகாதார அமைச்சகம் தனது ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பில், கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 15,712 பேர் என்று தெரிவித்துள்ளது. கோவிட்-19க்கு பலியானோர் எண்ணிக்கை 500-ஐத் தாண்டியுள்ளதாக தெரிவித்துள்ள அதேவேளையில் நோயிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2,230 என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உயிரிழப்புகள் அச்சத்தை ஏற்படுத்தினாலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நம்பிக்கையைத் தருகிறது. நோயிலிருந்து மீண்டவர்கள் பெரும்பாலும் நம்பிக்கையை ஒரு பற்றுக்கோடாக கொண்டிருப்பதையும் காணமுடிகிறது.

கரோனாவுக்கு எதிரான போரில் முன்னணியில் இருப்பவர்கள் மருத்துவர்கள் என்றால் அவர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் காவலர்கள் எனலாம். பொதுவெளியில் மக்களுடன் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு அவர்களை வழிநடத்தும் பணிகளில் ஆபத்தும் இருக்கிறது.

டெல்லியில் யூசூப் சராய் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும்போது கரோனா நோய்க்கு ஆளானார் காவல் உதவி ஆய்வாளர் ஜீத் சிங் (49). கரோனா சிகிச்சைக்குப் பிறகு முற்றிலுமாக மீண்டு குணமாகியுள்ள ஜீத் சிங், வீடு திரும்பினார். அப்போது அவர் வசித்துவரும் டெல்லி கல்காஜி பகுதியில் அவரது வீட்டைச் சுற்றியுள்ள மக்கள், பூக்களைத் தூவி வரவேற்றனர்.

நான் நோயிலிருந்து மீண்டதற்கு ஒரு காக்கி கடமையாளன் என்பதே காரணம் என்கிறார் ஜீத் சிங். இந்நோய்த் தொற்றுக்கு ஆளானதோடு மீண்டும் வந்துள்ள டெல்லியைச் சேர்ந்த முதல் போலீஸ்காரர்.

இதுகுறித்து அவர் பிடிஐக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

''எல்லாத் தடைகளுக்கும் மத்தியில் நான் நம்பிக்கையுடன் இருந்தேன். 'காக்கி' பற்றி நினைவுகள் எனக்கு நம்பிக்கையை ஊட்டத் தொடங்கின. கரோனா வைரஸைப் போல மர்மமான ஒரு எதிரிக்கு எதிராக எனது காக்கி சீருடையில் இருந்த தைரியம் வெற்றிபெற எனக்கு உதவியது.

இதையும் மற்ற நோய்களைப் போல ஒரு நோயாகத்தான் நினைத்தேனே தவிர இதற்கு நான் அடிபணியவில்லை.

கரோனா தொற்று வைரஸுடன் போராடுபவர்களுக்கு எனது செய்தி என்னவென்றால் தயவுசெய்து பயப்பட வேண்டாம். நேர்மறையான சிந்தனையோடு இருங்கள்.

மற்ற நோய்களைப் போலவே இதையும் கருதுங்கள், நீங்கள் விரைவில் குணமடைவீர்கள். கடவுளை நம்புங்கள், நீங்கள் நேர்மறையாக நினைத்தால் நல்ல விஷயங்கள் மட்டுமே உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். நம்மை மிகப்பெரிய நோய் தாக்கிவிட்டது என்ற அச்சத்தை உங்கள் இதயத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டாம்.

கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி நான் மருத்துவ அறிக்கையைப் பெற்றபோது நான் வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்தேன், அந்த அறிக்கையைப் படித்த எனது மகன்தான், ''கரோனா வைரஸ் இருப்பதாக சோதனை முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார். எனது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர், ஆனால் நான் அவர்களுக்கு உந்துதலை அளித்தேன். அவர்களிடம் நம்பிக்கையை இழக்காதீர்கள் என்று சொன்னேன். நான் நலமாகவே இருப்பேன், திரும்பி வருவேன் என்று கூறினேன். மனைவி மற்றும் மகனுடன் மருத்துவமனைக்குச் சென்றேன்.

காய்ச்சல் ஏற்பட்ட பின்னர் எய்ம்ஸ் மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தினேன். பின்னர், அவர் சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்..

நான் ஒரு அறையில் தனியாக இருந்தேன். சவால்களை எதிர்கொள்ள கடவுளையும் அழைத்துக்கொண்டேன். மருத்துவர்கள் மற்ற நோயாளிகளையும் பார்க்க வேண்டியிருப்பதால் நான் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகாதவரை அவர்களை நான் தொந்தரவு செய்யவில்லை.

மீண்டும் பணியில் இணைந்து மீண்டும் கடமையைத் தொடங்க வேண்டும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொண்டேன். கல்காஜி எஸ்.எச்.ஓ சந்தீப் காய் தினமும் என்னை ஊக்குவிப்பார். எனது குடும்பத்தினரும் தினமும் எனக்குத் தேவையான உணவுகள், அத்தியாவசியங்களைக் கதவருகே வைத்துவிட்டுச் செல்வர். என்னைப் பார்க்க விரும்பிய அவர்களை உள்ளே வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன்.

இங்கு முக்கியமான ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கடவுளைப் போன்றவர்கள். அவர்கள் எப்போதும் சோப்பு, கை கழுவுதல், மருந்துகள், உணவு மற்றும் தண்ணீர் ஆகியவற்றைச் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் என்னைச் சரிபார்க்க ஒவ்வொரு மணிநேரத்திலும் வருவார்கள். அவர்கள் எங்களை மிகச்சிறந்த முறையில் கவனித்துக்கொண்டார்கள்''.

இவ்வாறு காவல் உதவி ஆய்வாளர் ஜீத் சிங் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x