Published : 19 Apr 2020 03:27 PM
Last Updated : 19 Apr 2020 03:27 PM
மத்திய அரசு ஊழியர்களில் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் கரோனா வைரஸ் காரணமாக 20 சதவீதம் குறைப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருவது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது
கரோனா வைரஸ் நாடுமுழுவதும் தீவிரமாகப் பரவுவதையடுத்து, கடந்த மாதம் 25-ம் தேதி முதல் லாக்டவுனை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த லாக்டவுன் காரணமாக தொழிற்சாலை,வர்த்தக நிறுவனங்கள், கடைகள்,ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் மூடப்பட்டதால் ஏழைகள் , கூலித்தொழிலாளிகள், நடுத்தர குடும்பத்தினர் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் முடங்கியுள்ளனர்.
மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக சில முக்கியநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எம்.பி.க்கள் ஊதியம் குறைக்கப்பட்டது, தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தப்பட்து, பல்வேறு துறைகளில் உள்ள மூத்த உயர் அதிகாரிகள், ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் ஊதியமும் சிறிதளவு குறைக்கப்பட்டது. பல துறைகளில் உள்ள அதிகாரிகள் தாங்களாகவே வந்து ஊதியத்தைக் குறைத்துக்கொண்டனர்.
இதில் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்றோரின் ஓய்வூதியமும் 20 சதவீதம் குறைக்கப்படும் என்றும் சிறிது காலத்துக்கு நிறுத்திவைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி பரபரப்பாகியது. இதனால் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் ஒருவிதமான கலக்கமான மனநிலை காணப்பட்டு வருகிறது.
இதையடுத்து, மத்திய அரசின் ஓய்வூதியதாரர்கள் துறை மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “ மத்திய அரசின் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தை குறைக்கும் திட்டமோ அல்லது நிறுத்தும் திட்டமோ ஏதும் இல்லை. இதுபோன்று பல்ேவறு வதந்திகள் கரோனா வைரஸ் பரவும் காலத்தில் பரவி வருகிறது. மாறாக ஓய்வூதியதாரர்கள் நலனில் மத்திய அரசு முழுமையாக அக்கறை கொண்டு செயல்படுகிறது “ எனத் தெரிவித்துள்ளது.
மேலும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசின் விளக்கத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் பதிவிட்ட கருத்தில் “ ஓய்வூதியதாரர்களின் குழப்பத்துக்கு விளக்கமளித்தமைக்கு நன்றி, ஓய்வூதியம் குறைப்பு இல்லை” எனத் தெரிவித்துள்ளார்
இந்தியாவில் மத்தியஅரசின் சார்பில் 65.26 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT