Published : 08 Mar 2019 04:00 PM
Last Updated : 08 Mar 2019 04:00 PM
உத்தரப் பிரதேசத்தில் காஷ்மீர் வியாபாரிகள் மீதான தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் தாலிகஞ்ச் பகுதியில் இரு காஷ்மீர் இளைஞர்களும் தாலிகஞ்ச் பாலத்தின் வழியே பழங்களை விற்றுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காவி உடை அணிந்த கும்பல் ஒன்று இரு காஷ்மீர் இளைஞர்களையும் தங்கள் கையிலிருந்த கம்பால் கடுமையாக தாக்கினர்.
இச்சம்பவத்தை நேரில் பார்த்த உள்ளூர்வாசிகள் சிலர் தாக்குதலிலிருந்து இளைஞர்களை மீட்டு பின்னர் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான பஜ்ரஞ்ச் சோங்கர் என்பவர் உள்ளிட்ட நால்வர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஷ்மீர் வியாபாரிகள் தாக்கப்படும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த நிலையில் இந்தச் சம்பவத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் காஷ்மீர் வியாபாரிகள் தாக்கப்பட்டுள்ள வீடியோவை பதிவிட்டு, “ உத்தரப் பிரதேசத்தில் காஷ்மீர் வியாபாரிகள் தாக்கப்படும் இந்த வீடியோவால் வெறுப்படைந்திருக்கிறேன். காஷ்மீர் வியாபாரிகளை தாக்கியவர்களிடமிருந்து அவர்களை மீட்டவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். நமது நாட்டின் ஒவ்வொரு இடமும் இந்திய குடிமக்களுக்கு சொந்தமானது.
காஷ்மீர் சகோதர, சகோதரிகளுக்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் கடுமையாக கண்டிகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT