Published : 03 Jun 2018 08:21 AM
Last Updated : 03 Jun 2018 08:21 AM
சர்வதேச பொருளாதார நிலைமை, அளவுக்கு அதிகமான விளைச்சல் ஆகியவையே விவசாயிகள் பிரச்சினைக்கு முக்கிய காரணம் என்று மத்திய அமைச் சர் நிதின் கட்கரி தெரிவித்துள் ளார்.
விவசாய கடன் தள்ளுபடி, வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 10 நாட்கள் தொடர் போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினர். 130-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் போராட்டத்தை முன்னின்று நடத்துகின்றன. இதன் காரணமாக பால், காய்கறிகள் விநியோகம், விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினை குறித்து மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நாக்பூரில் நேற்று கூறியதாவது: சர்வதேச பொருளாதார நிலை, அளவுக்கு அதிகமான விளைச்சல் ஆகியவையே நாடு முழுவதும் விவசாயிகள் பிரச்சினைக்கு முக்கிய காரணம். இதற்கு தீர்வு காண மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. நீண்ட கால திட்டங்கள் சிலவற்றை செயல்படுத்த முடிவு செய்துள் ளோம்.
மகாராஷ்டிரா வேகமாக வளர்ந்து வருகிறது. இங்கிருந்து ரூ.2,000 கோடி மதிப்புள்ள திராட்சை, ரூ.1,600 கோடி மதிப்புள்ள வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. வேளாண் விளைபொருட்களை சேமிக்க கூடுதலாக கிடங்குகளை அமைப்பது குறித்து மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மத்திய அரசுடன் ஆலோசித்து வருகிறார்.
தேர்தலில் வளர்ச்சி திட்டங்களின் அடிப்படையில் எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்யவில்லை. முஸ்லிம்கள், தலித்துகள், பழங்குடியினர் மத்தியில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பிரிவினையைத் தூண்டி அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர். பாஜகசாதி, மதத்தின் அடிப்படையில் அரசியல் செய்யவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT