Published : 04 Jun 2018 06:26 AM
Last Updated : 04 Jun 2018 06:26 AM

ஆளுநர்களின் அலவன்ஸ் தொகை அதிகரிப்பு

மாநில ஆளுநர்களின் பயணம், விருந்தோம்பல் அலவன்ஸ் உயர்த்தப்பட்டுள்ளன.

கடந்த பிப்ரவரியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, ஆளுநர்களின் மாத ஊதியம் ரூ.1.1 லட்சத்தில் இருந்து ரூ.3.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆளுநர்களின் அலவன்ஸ் குறித்த புதிய வழிகாட்டு நெறிகளை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த வாரம் வெளியிட்டது. அதன்படி அந்தந்த மாநில ஆளுநர்களுக்கான அலவன்ஸ் 4 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்த்தப்பட்டுள்ளது.

மேற்குவங்க ஆளுநரின் பயணம், விருந்தோம்பல், கேளிக்கை உள்ளிட்ட செலவினங்களுக்காக ரூ.1.81 கோடி வழங்கப்பட வேண்டும். மேலும் தலைநகர் கொல்கத்தா மற்றும் டார்ஜிலிங்கில் உள்ள ஆளுநர் மாளிகைகளின் பராமரிப்பு செலவுக்கு ரூ.72.06 லட்சம், பர்னிச்சர் உள்ளிட்ட பொருட்களின் புதுப்பித்தல் பணிகளுக்கு ரூ.80 லட்சம் ஒதுக்கப்பட வேண்டும்.

தமிழக ஆளுநரின் பயணம், விருந்தோம்பல், கேளிக்கை மற்றும் இதர செலவினங்களுக்காக ரூ.1.66 கோடி வழங்கப்பட வேண்டும். தலைநகர் சென்னை, உதகையில் ஆளுநர் மாளிகைகள் உள்ளன. அவற்றின் பராமரிப்புக்கு ரூ.6.5 கோடி, பர்னிச்சர் உள்ளிட்ட பொருட்களின் புதுப்பித்தல் பணிகளுக்கு ரூ.7.50 லட்சம் ஒதுக்கப்பட வேண்டும்.

கர்நாடக ஆளுநருக்கு ரூ.1.05 கோடி, ஆளுநர் மாளிகை பராமரிப்புக்கு ரூ.38.2 லட்சம், பர்னிச்சர் புதுப்பித்தலுக்கு ரூ.6.5 லட்சம், ஆந்திர பிரதேச ஆளுநருக்கு ரூ.53 லட்சம், ஆளுநர் மாளிகை பராமரிப்புக்கு ரூ.18.3 லட்சம், பர்னிச்சர் புதுப்பித்தலுக்கு ரூ.6 லட்சம் என செலவு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல அனைத்து மாநில ஆளுநர்களின் செலவின தொகையை மத்திய உள்துறை அமைச்சகம் தனித்தனியாக பட்டியலிட்டுள்ளது. ஆளுநர்களின் ஊதியம், இதர செலவுகளை அந்தந்த மாநில அரசுகள் வழங்கி வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x