Published : 08 Jun 2018 08:21 AM
Last Updated : 08 Jun 2018 08:21 AM
உத்தரபிரதேசத்தில் முறையாக பணிபுரியாததாக கூறி, இரண்டு மாவட்ட ஆட்சியர்களை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இடைநீக்கம் செய்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பதேர்பூர் மாவட்டத்தில் ஆட்சியராக இருப்பவர் குமார் பிரசாந்த். இவர், அரசுத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் அலட்சியப் போக்கை கடைப்பிடித்து வந்ததாக புகார்கள் வந்தன. இதுதொடர்பாக விசாரணை நடத்திய முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆட்சியர் குமார் பிரசாந்த்தை நேற்று இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
அதேபோல், கோண்டா மாவட்டத்தில் இயங்கி வந்த சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்காததாக கூறி, அம்மாவட்ட ஆட்சியர் ஜே.பி.சிங்கையும் முதல்வர் யோகி ஆதித்யநாத் இடைநீக்கம் செய்துள்ளார். முதல்வரின் இந்த அதிரடி நடவடிக்கையானது உத்தரபிரதேசத்தில் பணிபுரியும் அரசு உயர் அதிகாரிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பாஜக படுதோல்வியை சந்தித்தது. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் திறமையற்ற நிர்வாகமே இந்தத் தோல்விகளுக்கு காரணம் என பரவலாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
அதன்காரணமாக சரியாக பணியாற்றாத 2 ஆட்சியர்கள் மீது முதல்வர் ஆதித்யநாத் நடவடிக்கை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. - ஐஏஎன்எஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT