Published : 22 Apr 2018 09:08 AM
Last Updated : 22 Apr 2018 09:08 AM

குஜராத்தில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமி, தாயை கொத்தடிமையாக வாங்கியுள்ளனர்: போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்

குஜராத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியையும் அவரது தாயையும் கொத்தடிமைகளாக பயன்படுத்துவதற்காக, குற்றம்சாட்டப்பட்ட நபர் ரூ.35 ஆயிரத்துக்கு வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சூரத் நகரில் கடந்த 6-ம் தேதி சாக்குமூட்டையில் கட்டப்பட்ட நிலையில் ஒரு சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. அவரது உடலில் 87 இடங்களில் காயங்கள் இருந்தன. உடற்கூறு ஆய்வில் அந்தச் சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் துப்பு கிடைக்காத காரணத்தால், இந்த வழக்கு குற்றப்பிரிவு போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து சூரத் நகர காவல் துணை ஆணையர் (குற்றப் பிரிவு) தீபன் பத்ரன் கூறியதாவது:

சிறுமியின் சடலம் கைப்பற்றப்பட்ட பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, கடந்த 5-ம் தேதி ஒரு காரில் இருந்து ஒரு மூட்டை தூக்கி வீசப்பட்டதைக் கண்டுபிடித்தோம். அந்த காரின் உரிமையாளரான ராஜஸ்தானின் மதோபூர் மாவட்டம், கங்காபூரைச் சேர்ந்த ஹர்சாயை குர்ஜார் (35), அவரின் சகோதர் ஹரி சிங் மற்றும் நரேஷ், அமர்சிங் குர்ஜார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். ஹர்சாயை, ஹரி சிங் ஆகிய இருவரும் சூரத் நகரில் மார்பிள், டைல்ஸ் ஒட்டும் பணியை ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகின்றனர். இவர்களிடம் சகோதரர்களான நரேஷ், அமர் சிங் பணியாற்றி வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஹர்சாயை கடந்த மார்ச் 15-ம் தேதி, ராஜஸ்தான் மாநிலம், கங்காபூரைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.35 ஆயிரம் கொடுத்துவிட்டு 11வயது சிறுமி, அவரது விதவை தாயை கொத்தடிமைகளாக அழைத்து வந்துள்ளார். இவர்களை சூரத்தில் தான் தங்கி இருக்கும் வீட்டில் உள்ள ஒரு அறையில் தங்க வைத்துள்ளார். இருவரையும் ஹர்சாயை தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளார். விஷயத்தை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன் என மிரட்டி உள்ளார்.

மார்ச் 20-ம்தேதி சிறுமியின் தாய் காணாமல் போனார். அதன்பின் அந்த சிறுமியை தனது சகோதரர் ஹரி சிங் தங்கியிருந்த அறையில் அடைத்துவைத்து பலாத்காரம் செய்துள்ளார். அப்போது ஹரி சிங் சொந்த ஊரில் இருந்துள்ளார். இதற்கு மேலும் அடைத்து வைக்க முடியாது எனக் கருதி கடந்த 5-ம் தேதி சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்த ஹர்சாயை, சடலத்தை காரில் எடுத்துச் சென்று 2 கிமீ.தொலைவில் ஜியாவ்-புதியா சாலையில் உள்ள ஒரு புதரில் வீசியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 10-ம் தேதி ஜியாவ்-புதியா சாலையில் அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் இந்தச் சிறுமியின் தாயாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். அது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x