Published : 21 May 2024 08:52 AM
Last Updated : 21 May 2024 08:52 AM

“நடப்பு சீசன் நமக்கு ஏமாற்றமே”- மும்பை இந்தியன்ஸ் அணியுடன் நீட்டா அம்பானி பேச்சு

நீட்டா அம்பானி

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசன் தங்கள் அணிக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்ததாக மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீட்டா அம்பானி, அணி வீரர்களுடனான கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் அரங்கில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற சாதனையை முதலாவதாக படைத்த அணி மும்பை இந்தியன்ஸ். நடப்பு ஐபிஎல் சீசனில் அணியின் கேப்டன்சி பொறுப்பை ஹர்திக் பாண்டியா வசம் ஒப்படைத்தது அணி நிர்வாகம். அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, தொடக்க ஆட்டக்காரராக விளையாடி இருந்தார்.

ஹர்திக் பாண்டியா தான் கேப்டன் என்ற அறிவிப்பு வெளியானது முதலே அந்த அணியின் ரசிகர்கள் அதனை விமர்சித்து வந்தனர். சீசன் தொடங்கியதும் அது உச்சத்தை எட்டியது. இந்த சீசனில் 14 போட்டிகளில் ஆடி வெறும் நான்கில் மட்டுமே வெற்றி கண்டு, முதல் சுற்றில் இருந்து வெளியேறிய முதலாவது அணி என்ற நிலைக்கு மும்பை தள்ளப்பட்டது.

இந்தச் சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடனான போட்டிக்கு பிறகு மும்பை அணி வீரர்களை நீட்டா அம்பானி சந்தித்துள்ளார்.

அப்போது அவர், “நம் அனைவருக்கும் இந்த சீசன் ஏமாற்றமாக அமைந்தது. நாம் எதிர்பார்த்தது கைகூடாமல் போனது. நான் அணியின் உரிமையாளர் மட்டுமல்ல மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகையும் கூட. மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெர்ஸியை அணிவது பாக்கியம். இந்த சீசன் குறித்து நாம் எல்லோரும் கூடி பேசுவோம். அதுகுறித்து ரிவ்யூ செய்வோம்” என வீரர்களிடம் தெரிவித்துள்ளார்.

அதோடு எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட உள்ள இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் மற்றும் பும்ராவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x