Published : 09 Feb 2018 09:35 AM
Last Updated : 09 Feb 2018 09:35 AM
‘‘தாஜ்மகாலைப் பாதுகாப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து 4 வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்’’ என்று உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க நினைவுச் சின்னமாக விளங்கும் தாஜ்மகாலைப் பாதுகாக்கக் கோரி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர் எம்.சி.மேத்தா உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தாஜ்மகாலைப் பாதுகாப்பதற்கு என்ன செய்யலாம் என்பது குறித்து விரிவான எதிர்கால திட்டங்களை 4 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரபிரதேச மாநில அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், தாஜ்மகால் பாதுகாப்பு மண்டலப் பகுதியில் திடீரென வர்த்தக ரீதியான நடவடிக்கைகள் அதிகரித்தது ஏன் என்று உ.பி. அரசும், தாஜ்மகால் பாதுகாப்பு மண்டல ஆணையமும் (டிடிஇசட்) விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தாஜ்மகாலை சுற்றி 10,400 சதுர கி.மீ. தூரம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. உ.பி.யில் உள்ள ஆக்ரா, பிரோசாபாத், மதுரா, ஹத்ராஸ், எடா ஆகிய மாவட்டங்களையும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாரத்பூர் மாவட்டத்தையும் உள்ளடக்கிய அந்தப் பாதுகாப்புப் பகுதியில் தற்போது தோல் தொழிற்சாலைகள், ஓட்டல்கள் திறக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பதில் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு துஷார் மேத்தா கூறும்போது, ‘‘இந்தப் பிரச்சினை குறித்து அரசிடம் இருந்து அறிவுரைகள் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறேன்’’ என்று கூறினார். இதையடுத்து வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT