Last Updated : 07 Mar, 2024 05:56 AM

 

Published : 07 Mar 2024 05:56 AM
Last Updated : 07 Mar 2024 05:56 AM

ஜெயலலிதா நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க தடை: கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்ட பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்புக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 1991 முதல் 1996-ம் ஆண்டுவரை முதல்வராக இருந்த ஜெயலலிதா மீதுவருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக வழக்குதொடரப்பட்டது. இவ்வழக்குவிசாரணையின்போது தமிழகலஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அவரது வீட்டில் இருந்து தங்க,வைர‌ நகைகள், வெள்ளிப் பொருட்கள், முத்துக்கள், ரத்தினக் கற்கள், கைக் கடிகாரங்கள், பட்டுப்புடவைகள், விலையுயர்ந்த காலணிகள் உட்ப‌ட பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றதால், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் கர்நாடக கருவூலத்தில் வைக்கப்பட்டன. இந்த பொருட்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கருவூலத்திலே பயனற்று இருப்பதால், அதனை ஏலம் விட்டு மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், “ஜெயலலிதாவின் நகைகளை மார்ச் 6,7 ஆகிய தேதிகளில் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். தமிழக அரசு அந்தநகைகளை அரசு வங்கி மூலம்ஏலம் விட வேண்டும். ஜெயலலிதாவின் வழக்கை நடத்தியதற்கு கர்நாடக அரசு ரூ.5 கோடி செலவு செய்துள்ளது. அந்த செலவு தொகையை தமிழக அரசு வ‌ழங்க வேண்டும்” என கடந்த மாதம் உத்தரவிட்டது.

ஜெ.தீபா மனு ஏற்பு: இதை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “ஜெயலலிதாவின் ரத்த வாரிசு என்ற முறையில் நகைகள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும். தமிழக அரசிடம் ஒப்படைக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” என கோரி இருந்தார்.

இந்த வழக்கு நேற்று முன்தினம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி முகம்மது நவாஸ் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெ.தீபாவின் கோரிக்கையை ஏற்று, ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இவ்வழக்கின் விசாரணையை மார்ச் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

ஆட்சேபனை மனு: இதுகுறித்து அரசு வழக்கறிஞர் கிரண் எஸ்.ஜாவலி கூறுகையில், “மார்ச் 26-ம் தேதி இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது, அரசு தரப்பில் ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்வோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x