Published : 07 Mar 2024 05:40 AM
Last Updated : 07 Mar 2024 05:40 AM

தேர்தலுக்கு சிறப்பு ‘மை’ தயாரிக்கும் பணி 70% முடிந்தது: மைசூரு நிறுவனம் எம்பிவிஎல் தகவல்

கோப்புப்படம்

மைசூரு: நாட்டில் நடைபெறும் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களித்த பின்னர் இடது கையின் ஆள் காட்டி விரலில் எளிதில் அழியாத மை வைக்கப்படும். அதன்மூலம் அவர் வாக்களித்து விட்டார் என்பதை உறுதி செய்து, கள்ள ஓட்டுப் போடுவது போன்ற மோசடிகளை தடுக்க உதவுகிறது. ஒரு வேளை வாக்காளருக்கு இடது கையில் ஆள் காட்டி விரல் இல்லை என்றால், வேறு விரலில் வைக்கப்படும்.

இடது கை விரல்கள் அனைத்தும் இல்லை என்றால், வலது கை ஆள் காட்டி விரலில் மை வைக்கப்படும். வலது கை ஆள்காட்டி விரல் இல்லை என்றால், வேறு விரலில் வைக்கப்படும். ஒரு வேளை வலது கையில் எந்த விரலும்இல்லை என்றால், தோளின் இடது அல்லது வலது பக்கத்தில் சிறப்பு மை வைக்கப்படும் என்று தேர்தல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேர் தலில் பயன்படுத்தும் சிறப்புமையை தயாரிக்க மைசூரு பெயின்ட்ஸ் அண்ட் வார்னிஷ் லிமிடெட் (எம்பிவிஎல்) நிறுவனத்துக்கு தலைமை தேர்தல் ஆணையம் ‘ஆர்டர்’ வழங்கி உள்ளது. அதன்படி சிறப்பு மை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து எம்பிவிஎல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.முகமது இர்பான் கூறுகையில், ‘‘சிறப்பு மை தயாரிக்கும் பணி 70 சதவீதம் முடிந்துவிட்டது.

மார்ச் 15-ம் தேதிக்குள் முழு பணியும் முடிந்துவிடும். ஏற்கெனவே மை நிரப்பிய குப்பிகளை வடகிழக்கு மற்றும் காஷ்மீருக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். தற்போது கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு அனுப்புவதற்காக மை தயாரிக்கிறோம். இதுவரை 26 லட்சம் மை குப்பிகள் அனுப்பிவிட்டோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் எம்பிவிஎல் நிறுவனம் 1962-ம் ஆண்டு முதல் தேர்தல் ஆணையத்துக்காக சிறப்பு மையைத் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் மட்டும்தான் தேர்தலில் பயன்படுத்தும் மையை வழங்கி வருகிறது. 10 எம்.எல் உள்ள ஒரு குப்பியில் இருந்து 700 வாக்காளர்களின் விரல்களில் மை வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x