Published : 07 Sep 2023 06:01 PM
Last Updated : 07 Sep 2023 06:01 PM

சனாதனத்தை எச்ஐவி உடன் ஒப்பிட்ட ஆ.ராசா - ‘இண்டியா’ கூட்டணிக்கு ‘இந்து ஃபோபியா’ இருப்பதாக பாஜக சாடல்

புதுடெல்லி: ‘சனாதனம் என்பது எச்.ஐ.வி வைரஸைப் போன்றது’ என நீலகிரி எம்.பியும், திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசா பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக, ‘இண்டியா கூட்டணிக்கு ஆழமான இந்து ஃபோபியா இருப்பதையே இது காட்டுகிறது’ என விமர்சித்துள்ளது.

நீலகிரி மாவட்ட திமுக வாக்குச்சாவடிகள் நிலை முகவர்கள் கூட்டம் உதகையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நூற்றுக்கணக்கான முகவர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் பேசிய ஆ.ராசா, “பிறப்பால், சாதியால் யாரும் உயர்ந்தவர்களும் அல்ல; தாழ்ந்தவர்களும் அல்ல. மதத்தின் பெயராலும் சாதியின் பெயராலும் நாட்டு மக்களைப் பிளவுப்படுத்துவோரை எதிர்க்கும் ஒரே சக்தியாக திமுக இருக்கிறது.

உதயநிதி ஸ்டாலின் கட்சியின் இளைஞர் அணி செயலாளராகவும், அமைச்சராகவும் பொறுப்பேற்றபோது ஏற்பட்ட மகிழ்ச்சியை விட டெங்கு, மலேரியா போன்ற நச்சுக் கிருமிகளுடன் சனாதனத்தை ஒப்பிட்டு, இதை ஒழிக்க வேண்டும் என தெரிவித்த கருத்தைக் கேட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். இந்தச் சிந்தனை போதும், இன்னும் நூற்றாண்டுகளைக் கடந்தும் இந்த இயக்கமும் தத்துவமும் தழைக்கும். உண்மையில், சொல்லப்போனால் சனாதனம் என்பது கொடிய எய்ட்ஸ் நோயை உருவாக்கும் எச்.ஐ.வி வைரஸைப் போன்றது. பாரபட்சமின்றி ஒழித்துக்கட்ட வேண்டும்” என கூறினார்.

அவரது இந்தக் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான தர்மேந்திர பிரதான், "பெயர் மாறுவதால் ஒன்றின் நோக்கமும் குணமும் மாறாது. சனாதன தர்மம் பற்றிய மூர்க்கத்தனமான கருத்துகளை இம்முறை ஆ.ராசா வெளிப்படுத்தி இருக்கிறார். இண்டியா கூட்டணியின் மூளை மழுங்கிப்போய் இருப்பதையும், அந்தக் கூட்டணிக்கு இந்து மதத்தின் மீது ஆழமான வெறுப்பு இருப்பதையும் ஆ.ராசாவின் பேச்சு காட்டுகிறது.

இந்தியாவின் ஆன்மாவை, உணர்ச்சியை, வேர்களை காங்கிரஸ் கட்சியும் அவர்களது கூட்டணியினரும் எவ்வாறு களங்கப்படுத்துகிறார்கள் என்பதை நாடு கவனித்துக் கொண்டிருக்கிறது. இந்த வெறுப்புணர்ச்சியாளர்களுக்கு, 'சனாதனம் நித்தியம், சனாதனமே உண்மை' என்பதை நினைவூட்டுவோம்" என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங், "திமுகவும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசும் ஆரம்பத்தில் இருந்தே இந்துக்களுக்கு எதிராகச் செயல்பட்டு வருபவை. அவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பை கடுமையாக விமர்சிப்பார்கள். ஆனால், முஸ்லிம் லீக், ஜமாத் இ இஸ்லாமி போன்ற அமைப்புகளை விமர்சிக்க மாட்டார்கள். இதன்மூலம் ஓட்டு வங்கி அரசியலை அவர்கள் செய்து வருகிறார்கள். இது இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு நாடு. இந்து மதத்தை நீங்கள் அவமதித்தால் இந்துக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள். இஸ்லாம் குறித்துப் பேச உங்களுக்கு துணிவு உண்டா?" என கேள்வி எழுப்பி உள்ளார்.

"சனாதன தர்மத்தை அவர்கள் இழிவுபடுத்தி உள்ளார்கள். ராகுல் காந்தி எங்கே தூங்கிக் கொண்டு இருக்கிறார்? அவரை எழுப்ப வேண்டும். திமுகவின் இந்த கருத்தை நீங்கள் ஏற்கிறீர்களா? இது சட்டத்தையும் அரசியல் சாசனத்தையும் மீறிய செயல் இல்லையா? இது வெறுப்புப் பேச்சு இல்லையா? இதற்காக அவர்கள் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டாமா? இந்துஸ்தான் இருக்கும் வரை சனாதன தர்மம் இருக்கும் என்பதை நான் அவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்" என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

தொடரும் கண்டனங்கள்: சனாதன தர்மத்துக்கு எதிரான பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள் உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்றும், எந்த ஒரு மதத்தையும் இழிவுபடுத்திப் பேச யாருக்கும் உரிமை இல்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கூறியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மத்திய அமைச்சர்களும், பாஜக தலைவர்களும் இன்றும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, "சனாதன தர்மம் குறித்த இண்டியா கூட்டணியின் கருத்துகள் கண்டிக்கத்தக்கவை. சனாதன தர்மம் அழிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கூறி இருக்கிறார்கள். இதுதான் அவர்களின் உண்மை முகம். 28 கட்சிகள் கொண்ட இந்தக் கூட்டணி நாட்டை பிளவுபடுத்த விரும்புகிறது. இந்து மதத்தை ஒழிக்க வேண்டும்; நாட்டை பிளவுபடுத்த வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். இதுதான் அவர்களின் உண்மையான முகம்" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், "சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று இண்டியா கூட்டணியைச் சேர்ந்த உதயநிதி ஸ்டாலின் பேசி இருக்கிறார். அவர் பேசி 5 நாட்கள் ஆகிவிட்டன. இது குறித்து இதுவரை ராகுல் காந்தியோ, நிதிஷ் குமாரோ, லாலு பிரசாத் யாதவோ எதுவும் பேசவில்லை. அவர்கள் அமைதியாக இருக்கிறாரகள். அவர்கள் எப்போது பேசுவார்கள்?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

பிஹார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத், "சனாதன தர்மத்தை இழிவுபடுத்த வேண்டும் என்ற முடிவை எங்கே எப்போது எடுத்தீர்கள் என சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் நான் கேட்க விரும்புகிறேன். இண்டியா கூட்டணியின் 3-வது கூட்டம் மும்பையில் நடந்ததே, அங்கு இந்த முடிவு எடுக்கப்பட்டதா? சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட இண்டியா கூட்டணியில் உள்ள அனைவரும் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். இந்துக்களின் உணர்வை சிதைக்கவோ, சனாதன தர்மத்தை பலவீனப்படுத்தவோ முகலாயர்களாலும் முடியவில்லை, ஆங்கிலேயர்களாலும் முடியவில்லை. எனவே, அதைச் செய்ய இவர்கள் யார்?" என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் சொல்வது என்ன? - "ஒரு செய்தி வந்தால், அது உண்மையா, பொய்யா என்பதை அறிந்துகொள்ளும் அனைத்து வசதிகளும் நாட்டின் பிரதமருக்கு உண்டு. அப்படி இருக்கையில், அமைச்சர் உதயநிதி சொல்லாத ஒன்றைச் சொன்னதாகப் பரப்பியது குறித்து, பிரதமர் அறியாமல் பேசுகிறாரா? அல்லது அறிந்தேதான் பேசுகிறாரா?" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். | விரிவாக வாசிக்க > சனாதன சர்ச்சை | உதயநிதி பேசியதன் விவரம் அறியாமலேயே பிரதமர் பேசலாமா?- முதல்வர் ஸ்டாலின் கேள்வி

இதனிடையே, "9 ஆண்டு கால ஆட்சியின் தோல்விகளை மறைக்க பாஜக கையில் எடுத்துள்ள பொய் கூச்சல்களை புறந்தள்ளி,கழகப்பணி - மக்கள் பணிகளில் கவனம் செலுத்தி சமத்துவம் - சமூக நீதி காப்பதற்கான நம் பயணத்தை தொடர்வோம்" என திமுக தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவரது விரிவான அறிக்கை > 9 ஆண்டு கால ஆட்சியின் தோல்விகளை மறைக்க பாஜக பொய்யைப் பரப்புகிறது - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x