Published : 07 Sep 2023 03:02 PM
Last Updated : 07 Sep 2023 03:02 PM

“அரசியலமைப்புதான் எனது மதம்” - சனாதன சர்ச்சைக்கு கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே விளக்கம்

பிரியங்க் கார்கே | கோப்புப்படம்

பெங்களூரு: "நான் அரசியலமைப்பை பின்பற்றுகிறேன். அரசியலமைப்புதான் எனது மதம்" என்று கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார். சனாதனம் குறித்த சர்ச்சையில் தன் மீதும், தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீதும் உத்தரப் பிரதேசத்தில் வழக்கு பதியப்பட்ட நிலையில், பிரியங்க் கார்கே இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "எந்த மதமும் மனிதர்களுக்கிடையே பாகுபாடு காட்டினால், அது மதமே இல்லை என்றே நான் கூறியிருந்தேன். நான் அரசியலமைப்பை பின்பற்றுகிறேன். அரசியலமைப்பே எனது மதம். அவர்கள் என் மீது வழக்குப் பதிவு செய்ய விரும்பினால், என்னைக் கைது செய்ய விரும்பினால், அது தனிப்பட்டவர்களின் விருப்பம். அது பற்றி எனக்கு கவலை இல்லை. அவர்களுக்கு எந்த மொழியும் புரியவில்லை. நான் அரசியலமைப்புதான் எனது மதம் என்று சொல்லியிருந்தேன். அதில், பாஜகவுக்கு ஏதாவது பிரச்சினை இருக்கிறதா? அவர்களுக்கு கன்னடம், இந்தி, ஆங்கிலம் எந்த மொழியும் புரியவில்லை. அவர்கள் எத்தனை வழக்குகள் வேண்டுமென்றாலும் பதிவு செய்யட்டும். அப்படி செய்யும் அளவுக்கு அவர்கள் ஓய்வாக இருக்கின்றனர்" என்று பிரியங்க் கார்கே கூறியுள்ளார்.

இதனிடையே, இந்த சர்ச்சை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "மணிப்பூர் கலவரத்தைத் தூண்டிவிட்டு 250-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்படக் காரணமாக இருந்தது, 7.5 லட்சம் கோடி ரூபாய் ஊழல் போன்றவற்றைத் திசை திருப்பத்தான் மோடி அண்ட் கோ இப்படி சனாதன கம்பை சுற்றிக்கொண்டு இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார். | வாசிக்க > 9 ஆண்டு கால ஆட்சியின் தோல்விகளை மறைக்க பாஜக பொய்யைப் பரப்புகிறது - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

வழக்குப் பதிவு பின்னணி: சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் நடத்தப்பட்ட கூட்டத்தில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா போன்ற நோய்களுடன் ஒப்பிட்டு அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, உதயநிதியின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே ஆதரவு தெரிவித்தார். “சக மனிதனை மனிதனாக மதிக்காத, சம உரிமை அளிக்காத எந்த மதமும் நோயை போன்றது. தான் நினைக்கும் கருத்தை சொல்ல உதயநிதிக்கு முழுஉரிமை உள்ளது” என பிரியங்க் கார்கே கூறியிருந்தார்.

இதையடுத்து, அமைச்சர் உதயநிதியின் பேச்சு மத உணர்வுகளை புண்படுத்துவதாக உத்தர பிரதேசத்தின் ராம்பூரில் உள்ள சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் ஹர்ஷ்குப்தா, ராம்சிங் லோதி ஆகியோர் புகார் கொடுத்தனர். இதன்பேரில், உதயநிதி ஸ்டாலின், பிரியங்க் கார்கே ஆகிய 2 பேர் மீதும் உத்தர பிரதேச போலீஸார் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்துள்ளனர். இவர்கள் இருவர் மீதும் 295-ஏ (மத உணர்வுகளை சீர்குலைக்கும் வகையில் திட்டமிட்டு செயல்படுதல்), 153-ஏ (வெவ்வேறு மதக் குழுக்கள் இடையே பகைமையை ஊக்குவித்தல்) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x