Published : 26 Feb 2019 09:44 AM
Last Updated : 26 Feb 2019 09:44 AM

மக்கள் மனசுல மீண்டும் பிரதமர் மோடிதான்- பாஜக தலைவர் அமித்ஷா கருத்து

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக மக்கள் விரும்புகின்றனர் என்று பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

ஏபிபி நியூஸ் சார்பில் டெல்லியில் நடந்த கருத்தரங்கில் அமித்ஷா பேசியதாவது:

தீவிரவாதத்தை பொறுத்துக் கொள்ளவே முடியாது என்ற கொள்கையுடன் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு செயல்படுகிறது. புல்வாமாவில் நடந்த தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. உரி தாக்குதலுக்கு பதிலடியாக துல்லியத் தாக்குதல் நடத்தப் பட்டது. பிரதமர் மோடியின் ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் அதிக அளவில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தீவிரவாதத்துக்கு எதிராக மத்திய அரசு உறுதியுடன் செயல்படுகிறது.

மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவார் என்று நாங்கள் சொல்கிறோம். அதேபோல் எதிர்க்கட்சிகளால் தங்கள் பிரதமர் வேட்பாளரை சொல்ல முடியுமா? விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி, 10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீடு போன்ற பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு செய்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகளைவிட வரும் தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெறுவோம். நாட்டு மக்களின் மனோநிலை பிரதமர் மோடிக்கு ஆதரவாக உள்ளது. மோடி மீண்டும் பிரதமராக மக்கள் விரும்புகின்றனர். வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அமித்ஷா பேசி னார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x