Published : 15 Mar 2023 04:12 AM
Last Updated : 15 Mar 2023 04:12 AM

ஸ்ரீவில்லிபுத்தூர் | மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மணல் கடத்தல் - 11 வாகனங்கள் பறிமுதல்; 10 பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தனியார் நிலத்தில் அனுமதி இன்றி மண் அள்ளிய டிப்பர் லாரி, டிராக்டர், ஜேசிபி என 11 வாகனங்களை பறிமுதல் செய்து 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஶ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பந்தப்பாறை செல்லும் வழியில் தனியார் நிலத்தில் சட்ட விரோதமாக மண் அள்ளப்படுவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி சபரிநாதனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆய்வாளர் கீதா, சார்பு ஆய்வாளர் கணேசன் தலைமையிலான போலீஸார் நேற்று மாலை அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முறம்பு பீட் பகுதிக்கு உட்பட்ட பாண்டியன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் உரிய அனுமதி இன்றி சுமார் 10 அடி ஆழத்திற்கு மேல் மண் அள்ளப்பட்டு செங்கல் சூலைக்கு கொண்டு செல்லப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து டிப்பர் லாரிகள், டிராக்டர்கள் மற்றும் மண் அள்ளுவதற்கு பயன்படுத்திய ஜேசிபி இயந்திரங்கள் உட்பட 11 வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் வாகன ஓட்டுநர்களான ராஜபாளையத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன்(35), வத்திராயிருப்பை சேர்ந்த ராமசாமி(34), மகேஸ்வரன்(23) , ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த முனியாண்டி(41), கார்த்திக்(25), கண்ணன் (27), பூலார் (47), வேலூர் மாவட்டம் வானியம்பாடியை சேர்ந்த ராஜேஸ்(30), கான்சாபுரத்தை சேர்ந்த முத்துராஜ்(37), புதுப்பட்டியை சேர்ந்த ஆனந்தகுமார்(33) ஆகியோரை கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x