Published : 09 Mar 2023 06:05 AM
Last Updated : 09 Mar 2023 06:05 AM

சின்னசேலம் பள்ளி மாணவி மரண வழக்கில் இரு வாரத்தில் இறுதி அறிக்கை - உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தகவல்

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அடுத்துள்ள கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்த 12-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் கடந்தாண்டு இறந்தார். அதையடுத்து பள்ளி வளாகத்தில் வன்முறை ஏற்பட்டு பள்ளி வளாகம் சூறையாடப்பட்டது.

இந்நிலையில் இறந்த மாணவியின் தந்தை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் தனது மகளின் மரணத்தி்ல் மர்மம் உள்ளதால் இந்த வழக்கை ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்கக்கோரி இறந்த மாணவியின் தாயாரும் தனியாக வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வழக்கறிஞர் சந்தோஷ் மற்றும் மாணவியின் பெற்றோர் தரப்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

அப்போது அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், இந்த வழக்கில் சிபிசிஐடி போலீஸார் தங்களின் புலன் விசாரணையை முடித்து விட்டனர். மாணவி பயன்படுத்திய மொபைல் போன் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அறிக்கை பெறப்பட்டுள்ளது. இன்னும் இரு வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார்.

அதையடுத்து மாணவியின் தாயார் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க நீதிபதி உத்தரவி்ட்டார். அப்போது மாணவியின் பெற்றோர் தரப்பில், அதுவரை இந்த வழக்கில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீஸாருக்கு தடை விதிக்க வேண்டும், என கோரப்பட்டது. ஆனால் அதையேற்க மறுத்த நீதிபதி விசாரணையை மார்ச் 23-க்கு தள்ளி வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x