Published : 09 Mar 2023 07:31 AM
Last Updated : 09 Mar 2023 07:31 AM

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் காவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து: 3 மகள்களை போலீஸ் ஆக்கிய தந்தைக்கு செல்போனில் பாராட்டு

சென்னை: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு காவல் துறை பெண் அதிகாரிகள், பெண் காவலர்களுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், மரக்கன்றுகளை அவர்களுக்கு பரிசாக வழங்கினார்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலினை, காவல் துறை இயக்குநர் முதல் காவலர்கள் வரை பல்வேறு நிலைகளில் பணியாற்றும் பெண்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்த முதல்வர், பரிசாக மரக்கன்றுகளை வழங்கினார்.

இந்த நிகழ்வில் சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவர் சீமா அகர்வால், ரயில்வே காவல் துறைகூடுதல் டிஜிபி வனிதா, கூடுதல் டிஜிபி பாலநாகதேவி, சிபிசிஐடி ஐ.ஜி. தேன்மொழி மற்றும் முதல் வரின் பாதுகாப்பு பிரிவு பெண் காவல் அலுவலர்கள் பங்கேற்றனர். தலைமை டிஜிபி சைலேந்திரபாபு,சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், முதல்வரின் பாதுகாப்பு எஸ்.பி. திருநாவுக்கரசு ஆகியோர் உடன் இருந்தனர்.

பிறகு, சென்னை அண்ணா சாலையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு சென்ற முதல்வர், அங்கு பணியாற்றும் பெண் காவல் அதிகாரிகள் முதல் காவலர் வரை அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து, புத்தகங்களை பரிசாக வழங்கினார். உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், இணை ஆணையர்கள் ரம்யா பாரதி, திஷா மித்தல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

விவசாயிக்கு போனில் வாழ்த்து: இதற்கிடையே, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கீழ்ஆவதம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வெங்கடேசன் என்பவரை முதல்வர் ஸ்டாலின் நேற்று செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். வெங்கடேசனின் மகள்களான பிரீத்தி (28), வைஷ்ணவி (26), நிரஞ்சனி (22) ஆகிய 3 பேரும் காவல் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு தற்போது பயிற்சியில் உள்ளனர்.

மனைவி 20 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்ட நிலையில், தனது சொற்ப வருமானத்தை வைத்து, 3 மகள்களும் காவல் பணிக்கு தேர்வாவதற்கு அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்ததற்காக, வெங்கடேசனுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்தார்.

முதல்வருக்கு வெங்கடேசன் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார். பின்னர், முதல்வர் கூறியதன்பேரில், அமைச்சர் ஆர்.காந்தி, அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகன் ஆகியோர் வெங்கடேசனின் வீட்டுக்கு வந்து, ரூ.1 லட்சம் உதவித் தொகையை வழங்கினர். மாவட்ட ஆட்சியர் வளர்மதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மகளிர் உயர, மாநிலம் உயரும்: மகளிர் தினத்தை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட முகநூல் பதிவில், ‘வீடு, வணிகம், சொத்து ஆகிய பிரிவுகளில் பல்வேறு தொழில் முனைவுகளுக்காக கடன் வாங்கும் பெண்கள் பட்டியலில் தமிழக பெண்கள் 2-ம் இடத்திலும், தனிநபர் கடனில் முதலிடத்திலும் உள்ளனர் என்று பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

நாட்டிலேயே தென் மாநிலங்களில்தான் பெண்களின் சமூகபங்களிப்பு அதிகம். அதிலும், தமிழக பெண்கள் எந்த அளவுக்கு பொருளாதார சுதந்திரம் பெற்றவர்களாக இருக்கின்றனர் என்பதை உணர்த்தும் அந்த செய்தி, உலக மகளிர் தினத்தில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மகளிர் உயர, மாநிலம் உயரும்’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x