Published : 13 Jan 2023 07:50 AM
Last Updated : 13 Jan 2023 07:50 AM

சென்னை | தொலைதொடர்பு பரிமாற்றம் மூலம் வெளிநாட்டு போன் அழைப்புகளில் மோசடி: 1,700 சிம் கார்டுகள் பறிமுதல்; ஒருவர் கைது

சென்னை: தொலைதொடர்பு பரிமாற்றம் மூலம் வெளிநாட்டு போன் அழைப்புகளை உள்ளூர் போன் அழைப்புகளாக மாற்றி மோசடி செய்தவரை போலீஸார் கைது செய்து, அவரிடம் இருந்து1,700-க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளையும், சிம் பாக்ஸ்களையும் பறிமுதல் செய்தனர்.

சென்னையில் இயங்கும் பிரபல தனியார் தொலை தொடர்பு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அதில் சட்டத்துக்கு புறம்பான தொலைத்தொடர்பு நடவடிக்கையால் தங்களது நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

சென்னை ஐஸ் அவுஸ் பகுதியில் 9 சிம் பாக்ஸ்களை போலீஸார் கைப்பற்றி, கேரளா மாநிலம் மல்லாபுரத்தை சேர்ந்த பஷீர்(35) என்பவரை விசாரித்தனர். அவர் அளித்ததகவலின் பேரில் ராயப்பேட்டை, சிஐடிநகர் ஆகிய இரு இடங்களில் போலீஸார் சோதனை நடத்தி 6 சிம் பாக்ஸ்கள், சிம் கார்டுகள், மோடம்களை பறிமுதல் செய்தனர். 1,700-க்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பஷீரிடம் நடத்திய விசாரணையில், சவூதியை சேர்ந்த அப்துர் ரகுமான் என்பவர் மூலம் சிம் கார்டுகள் மற்றும் மோடம்கள் கொண்ட சிம் பாக்ஸ்கள் வாங்கி, அதன் மூலம் வெளிநாட்டில் இருந்து வரும் சர்வதேச அழைப்புகளை உள்ளூர் போன்அழைப்புகளாக மாற்றி மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து பஷீரை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x