Published : 13 Jan 2023 06:10 AM
Last Updated : 13 Jan 2023 06:10 AM

முன்னாள் அதிபர் மைத்ரி பால சிறிசேன ரூ.10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் - இலங்கை உச்ச நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு: இலங்கையில் கடந்த 2019-ம்ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் தினத்தில் கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சொகுசு ஓட்டல்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதில் 11 இந்தியர்கள் உட்பட சுமார் 270 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதல் குறித்து இந்தியா முன்கூட்டியே உளவுத் தகவல் அளித்தும், அதை தடுக்க தவறியதாக இலங்கையின் அப்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேனா மற்றும் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

முன்னாள் அதிபர் சிறிசேனவால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவும், தீவிரவாத தாக்குதலை தடுக்க அப்போதைய அதிபர் தவறிவிட்டதாக கூறியது. ஆனால், இந்த விஷயத்தில் தன் மீது எந்த குற்றமும் இல்லை என முன்னாள் அதிபர் சிறிசேன தொடர்ந்து கூறிவருகிறார். அவருக்கு எதிராகபாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உட்பட 12 மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அதில் தாக்குதலை தடுப்பதில் அதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அலட்சியமாக இருந்துவிட்டனர் என கூறியிருந்தனர். இந்த வழக்கில் 7 நீதிபதிகள் அடங்கிய இலங்கை உச்ச நீதிமன்ற அமர்வு நேற்று அளித்த தீர்ப்பில் கூறியதாவது:

தீவிரவாத தாக்குதல் குறித்துநம்பகமான தகவல் கிடைத்தும், நாட்டின் மீதான தாக்குதலை தடுப்பதில் அலட்சியமாக இருந்ததற்காக பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன இலங்கை பணத்தில் ரூ.10 கோடியை தனது சொந்த நிதியில் இருந்து இழப்பீடாக வழங்க வேண்டும்.

காவல்துறை முன்னாள் தலைவர் பூஜித் ஜெயசுந்தரா, உளவுத்துறை முன்னாள் தலைவர் நிலந்தா ஜெயவர்த்தனே ஆகியோர் தலா ரூ.7.5 கோடியும், பாதுகாப்புத்துறை முன்னாள் அமைச்சர் ஹெமாசிறி பெர்ணாண்டோ ரூ. 5 கோடியும் இழப்பீடாக வழங்க வேண்டும்.

இலங்கை உளவுத்துறை முன்னாள் தலைவர் சிசிரா மெண்டிஸ் ரூ.1 கோடியும் இழப்பீடாக வழங்கவேண்டும். இந்த இழப்பீட்டை 6 மாதகாலத்துக்குள் செலுத்த வேண்டும். இவ்வாறு இலங்கை உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x