

பால்கர்: பாலியல் வன்கொடுமையிலிருந்து தப்பிக்க ஓடும் காரிலிருந்து, குதித்த இளம்பெண் படுகாயமடைந்தார். அவரது 10 மாத குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து மகாராஷ்டிர போலீஸார் கூறியதாவது:
மகாராஷ்டிர மாநிலம் பால்கர் நகருக்கு அருகே மும்பை-அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை, வேகமாக சென்று கொண்டிருந்த காரிலிருந்து ஒரு பெண் தனது 10 மாத குழந்தையுடன் குதித்துள்ளார். இதில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ளோம். சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறோம். கார் ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதால் அந்தப் பெண் காரிலிருந்து குதித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அந்தக் காரின் ஓட்டுநர் விஜய் குஷ்வாகா என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நபரை தேடி வருவதுடன் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.